நிர்மலா சீதாராமனைப் போல திருச்சியை பூர்வீகமாக கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!
Recommended Video
டெல்லி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் போல திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் வெளியுறவுத் துறை செயலாலர் ஜெய்சங்கர்.
ஜெய்சங்கரின் தந்தை கே. சுப்பிரமணியன் திருச்சியில் பிறந்தவர். 1950ம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டம்பெற்று 1951-ல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பாதுகாப்புத் துறை அதிகாரியானார்.
தமிழக அரசிலும் மத்திய அரசியலும் மத்திய அரசியலும் பல முக்கியப் பதவிகளை வகித்தவர் கே.சுப்பிரமணியம். பத்திரிகை துறையிலும் அனுபவம் பெற்றவரான சுப்பிரமணியம் நூல்களையும் எழுதியுள்ளார்.
அவரது மகனான ஜெய்சங்கர் 1955-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் 1977-ம் ஆண்டு வெளியுறவுத் துறையில் இணைந்தார்.
மூத்த வெளியுறவுத் துறை அதிகாரியான ஜி. பார்த்தசாரதியின் சிஷ்ய பிள்ளையாக செயல்பட்டார் ஜெய்சங்கர். அமெரிக்காவுக்கான இந்திய தூதராகப் பணியாற்றிய ஜெய்சங்கர் 1988-90ம் ஆண்டுகளில் இலங்கைக்கான இந்திய தூதராக இருந்தார்.
இக்காலகட்டத்தில்தான் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்று தமிழர்களை படுகொலை செய்த சம்பவம் நடைபெற்றது. சிங்கப்பூர், சீனா நாடுகளுக்கான இந்திய தூதராகவும் ஜெய்சங்கர் பணிபுரிந்தார்.
2015-ம் ஆண்டு மத்திய அரசின் வெளியுறவுத் துறை செயலரானார். இவர் வெளியுறவுத் துறை செயலாளராக பதவி வகித்த போது அண்டைநாடுகளுடான உறவு சுமூகமாக இருந்தது இல்லை. மாலத்தீவு இந்தியாவை எதிர்த்தது. இலங்கையும் இந்தியாவை மதித்து நடக்கவில்லை.
பாகிஸ்தான் எப்போதும் போல் சீண்டிக் கொண்டிருந்தது. பூடானில் இந்தியா பராமரித்து வரும் டோக்லான் பீடபூமியை கைப்பற்ற சீனா பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. இந்த நிலையில் ஜெய்சங்கரை மத்திய அமைச்சராக்கியுள்ளார் பிரதமர் மோடி.
மோடி அமைச்சரவையில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள நிர்மலா சீதாராமன், திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இருப்பினும் தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளில் எதிர்ப்பான நிலை கொண்டவர்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு காவிரி நதிநீரை திறந்துவிடக் கூடாது என வலியுறுத்தியவர் நிர்மலா சீதாராமன். தற்போது அவரைப் போல திருச்சியைப் பூர்வீகமாக கொண்ட ஆனால் தமிழ்நாட்டுக்குத் தொடர்பில்லாத ஜெய்சங்கர் மத்திய அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
இவரும் நிர்மலா சீதாராமனைப் போல செயல்படுவாரா? அல்லது தமிழக நலன் சார்ந்து செயல்படுவாரா?. என்பது விரைவில் தெரிந்துவிடும். தமிழர் விரோத போக்கால்தான் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாத நிலையில் தமிழகத்துக்கு புதிய திட்டங்களை இருவரும் கொண்டு சேர்ப்பார்களா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அப்படி தமிழக மக்கள் வரவேற்கும் நலத் திட்டங்களை இருவரும் கொண்டுவந்தால் தமிழகத்தின் களநிலவரம் மாறுவது உறுதி.