அமைதி போராட்டங்களுக்கு பாதுகாப்பு...விவசாயிகள் போராட்டம்...ஐநா மனித உரிமைகள் கழகம் கருத்து
டெல்லி : அமைதியான வழியில் உணர்வுகளை வெளிப்படுத்தும் போராட்டங்கள் ஆப்லைன் மற்றும் ஆன்லைனில் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகளுக்கான தூதர் அலுவலகம் கருத்து தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் தனியார் வியாபாரிகளுக்கே லாபத்தை தரும் எனவும், தங்களின் விளை பொருளுக்கான ஆதார விலை நிர்ணயம் இந்த சட்டத்தால் முடிவுக்கு வரும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனால் இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். சட்டங்கள் திரும்பப் பெறும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்க போராட்ட பகுதியில் இணையதள சேவை மடக்கப்பட்டது. இருந்தும் போராட்டத்திற்கு பலம் சேர்க்க நாளை நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
முடக்கப்பட்ட இன்டர்நெட்டை சரிசெய்யுங்க...பிரதமருக்கு விவசாயிகள் கோரிக்கை
இதற்கிடையில் பார்லிமென்ட்டில் விவசாயிகள் போராட்டம் தொடர்பான விவாதத்தின் போது பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இதற்கு தீர்வு காண அரசு தயாராக உள்ளது. தேவையான திருத்தங்களை கொண்டு வரவும் அரசு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
#India: We call on the authorities and protesters to exercise maximum restraint in ongoing #FarmersProtests. The rights to peaceful assembly & expression should be protected both offline & online. It's crucial to find equitable solutions with due respect to #HumanRights for all.
— UN Human Rights (@UNHumanRights) February 5, 2021
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச பிரபலங்கள், அமெரிக்க வெளியுறவுத்துறை ஆகியோர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் போராட்ட களத்தில் இணையதள சேவை முடக்கப்பட்டத்தையும் அவர்கள் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் கழகமும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டது. அதில், விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அரசும் போராட்டக்காரர்களும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். அமைதியான வழியில் உணர்வுகளை வெளிப்படுத்தும் போராட்டங்கள் ஆப்லைன் மற்றும் ஆன்லைனில் பாதுகாக்கப்பட வேண்டும்.அனைவரும் மனித உரிமைகளுக்கு உரிய மரியாதை அளித்து, உரிய தீர்வை காண்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.