Exit polls: மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ்.. மற்ற கட்சிகளையும் கெடுத்துவிட்டதுதான் மிச்சம்
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்தி பார்க்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளனர் என்பதை எக்ஸிட் போல் முடிவுகள் பகிரங்கப்படுத்தியுள்ளன.
லோக்சபா தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், நேற்று மாலை முதல், பல்வேறு முன்னணி டிவி சேனல்களும் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டன. அதில் சொல்லி வைத்தாற்போல, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பெரும் பின்னடைவு கிடைக்கப்போகிறது என்றுதான் ரிசல்ட்கள் வந்துள்ளன.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 'காங்கிரஸ் இல்லா பாரதம்' என்ற கோஷத்தை, நரேந்திர மோடி முன் வைத்தார். அந்த கோஷம் பலன் கொடுத்ததன் விளைவாகத்தான், வெறும் 44 சீட்களை மட்டுமே காங்கிரஸ் பெற்று, அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. அதன் ஓட்டு வங்கி வெறும் 19.3 சதவீதமாக குறைந்தது. 37 தொகுதிகளை வென்ற அதிமுக, அகில இந்திய அளவில் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்து அசத்தியது.
போட்டியிடாத கட்சிக்கு 2.9% ஓட்டாம்.. அரே பய்யா.. இன்னா மாதிரி குழப்பியிருக்கீங்க பாருங்க!
ராகுல் காந்தி தலைமை
இம்முறை இந்தியாவின் பழமையான கட்சி தனது புதிய தலைமையின்கீழ், வீறு கொண்டு எழும் என்று அதன் தொண்டர்கள் நம்பினர். ஆனால் எக்ஸிட் போல் முடிவுகள், வேறு மாதிரிதான் உள்ளன. பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள், காங்கிரஸ் கூட்டணியால், 80-160 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடியும் என்று கணித்துள்ளன.
கோட்டைவிட்ட காங்கிரஸ்
ஒரு காலகட்டத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்த உ.பியில் கூட அதிகபட்சம் 2 தொகுதிகளைத்தான் காங்கிரஸ் வெல்ல முடியும் என்கிறது பெரும்பாலான எக்ஸிட் போல்கள். கூட்டணி ஆட்சி நடத்தி வரும் கர்நாடகாவில் கூட அதிகபட்சம் 6 சீட்கள்தான் அந்த கூட்டணிக்கு கிடைக்குமாம். தமிழகத்தில் திமுக கூட்டணி தயவால் காங்கிரஸ் கூட்டணிக்கு அகில இந்திய அளவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சீட் கிடைக்கும் என்பதுதான் எக்ஸிட் போல்கள் சொல்லும் சேதி.
மக்கள் பிரச்சினைகள்
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, கச்சா எண்ணை விலை உயர்வு, மதக் கலவரங்கள் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இருந்தும், அதை வாக்குகளாக மாற்றுவதில் காங்கிரஸ் தவறி விட்டது என்றுதான் தெரிகிறது. இது ராகுல் காந்தி தலைமையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியால்தான், வாக்குகள் சிதறி அவை பாஜகவுக்கு சாதகமாகியுள்ளன என்பதையும் மறுக்க முடியாது.
பிராந்திய கட்சிகள்
ஏனெனில் பாஜக, காங்கிரஸ் தவிர்த்த கூட்டணிக்கு 104 தொகுதிகள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் கூறியுள்ளது. இந்தியா டுடே கருத்துக் கணிப்புப்படி, பிற கட்சிகள் 127 தொகுதிகளை பெறும். ரீபப்ளிக் டிவி கணிப்புப்படி, பிற கட்சிகள் அதிகபட்சம் 125 தொகுதிகள் வரை வெல்லும். நியூஸ் 18 கருத்துக் கணிப்புப்படி, காங். கூட்டணி 82 தொகுதிகளையும், பிற கட்சிகள் 124 தொகுதிகளையும் வெல்லும். இப்படியாக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஈடாக அல்லது அதற்கும் மேல்தான் பிற பிராந்திய கட்சிகள் சீட்களை பெறப்போவது எக்ஸிட் போல் மூலம் உறுதியாகியுள்ளது.
காங்கிரஸ் மனப்பாங்கு
சில பிராந்திய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்னும் சில கட்சிகளுடன் அதற்கான வாய்ப்பு திறந்தே இருந்தது. அப்படி கூட்டணி அமைத்திருந்தால் பாஜகவுக்கு பெரும் சவாலை கொடுத்திருக்க முடியும். ஆனால் தாங்கள்தான் பெரிய கட்சி, தங்கள் பின்னால்தான் பிறர் அணி வகுக்க வேண்டும் என்ற பெரிய அண்ணன் மனப்பாங்கில் இருந்து காங்கிரஸ் கீழே இறங்க தயாராக இல்லை. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறது. விட்டுக்கொடுத்தார் கெட்டுப்போவதில்லை என்ற பழமொழியை, ராகுல் காந்தி தமிழகம் வரும்போது, தங்கபாலு தவிர்த்து, வேறு ஒருவரை வைத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்லச் சொல்லவும். ஒருவேளை அதன்பிறகுதான், காங்கிரசுக்கு விடிவுகாலம் பிறக்கலாம்.