பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?
Recommended Video
டெல்லி: அபிநந்தன் பாஜகவுக்கு வாக்கு கோரும் புகைப்படம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அம்பலப் படுத்தியுள்ளது பிபிசி செய்திகளின் உண்மை கண்டறியும் குழு.
அபிநந்தன் கடந்த மார்ச் மாதம் தேசிய நாயகனாக கொண்டாடப்பட்டார். இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இயக்கிய போர் விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் பிப்ரவரி 27ஆம் தேதி சுடப்பட்டது.

பின் அவரை பிடித்து சென்ற பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக மார்ச் 1ஆம் தேதி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் ஒப்படைக்கப்பட்டபோதும் சரி அதற்கு முன்பும் சரி அவர் இந்தியர்களால் ஒரு கதா நாயகனாக கொண்டாடப் பட்டார்.
அப்போது அபிநந்தன் வைத்திருந்த மீசையும் இந்தியாவில் பிரபலமாகியது. இளைஞர்கள் பலரும் அபிநந்தன் போல மீசை வைத்துக் கொண்டனர். இது ஒருபுறம் என்றால் பாஜக ஆதரவாளர்கள் இவரை வைத்து பாஜகவுக்கு ஆதரவு திரட்ட தொடங்கினர்.
குறிப்பாக நமோ பக்த் (NAMO Bhakt) மற்றும் மோதி சேனா (MODI Sena) ஆகிய வலதுசாரி குழுக்கள் இதில் தீவிரமாக இயங்கி வந்தன. இதனையடுத்து தற்போது தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் அபிநந்தன் போன்று தோற்றமுடைய ஒருவர் தனது கழுத்தில் காவித் துணியை அணிந்துள்ளார். அதில் பாஜகவின் சின்னமான தாமரை பொறிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பதிவில் "இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாஜக-வை ஆதரிக்கிறார். அவரும் பிரதமர் நரேந்திர மோதிக்குதான் வாக்களித்துள்ளார். இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோதியைவிட வேறு எவரும் சிறந்த பிரதமர் இல்லை. நண்பர்களே, ஜிஹாதிகளும், காங்கிரஸும் உணரட்டும் அவர்களால் ராணுவ வீரர்களை உயிருடன் மீட்க முடியாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பதிவு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பல்லாயிரக் கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது. நமோ பக்த் (NAMO Bhakt) மற்றும் மோதி சேனா (MODI Sena) ஆகிய வலதுசாரி குழுக்கள் இந்த பதிவை பரவலாக பகிர்ந்து வருகின்றன. இந்தப் பதிவை கண்ட சிலர் இதன் உண்மைத் தன்மையை அறிய இதை பிபிசியின் உண்மை கண்டறியும் குழுவுக்கு அனுப்பியுள்ளனர். இதை ஆய்வு செய்த பிபிசி இந்த புகைப்படம் உண்மையில்லை என்று கூறியுள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிபிசி, அந்த விமானி தேசிய நாயகனாக கொண்டாடப்படுகிறார். அவரது மீசை மிகப்பிரபலமடைந்தது. இந்தியர்கள் அவரை போல மீசை வைத்துக் கொள்ள விரும்பினர். அபிநந்தன் போல மீசை வைத்து, மூக்கு கண்ணாடி போட்டிருக்கும் அந்த நபர் பாஜக-வின் தாமரை சின்னம் பொறித்த துண்டு அணிந்திருந்தார். அந்த புகைப்படத்தை துல்லியமாக ஆராய்ந்ததில் ஏராளமான வேற்றுமைகள் அந்த புகைப்படத்தில் இருக்கும் நபருக்கும் அபிநந்தனுக்கும் இருப்பது தெரியவந்தது. அபிநந்தனுக்கு உதட்டுக்கு கீழ் மச்சம் இருக்கும். ஆனால், இந்த புகைப்படத்தில் இருக்கும் நபருக்கு அவ்வாறான மச்சம் ஏதும் இல்லை.
அந்த மனிதருக்கு பின்னால் 'சமோசா சென்டர்' என்று குஜராத்தியில் எழுதப்பட்டிருக்கும். இதன் மூலம் இந்தப் படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், குஜராத்தில் இன்னும் தேர்தலே தொடங்கவில்லை. இதற்கெல்லம் மேலாக அபிநந்தன் மார்ச் 27ஆம் தேதி இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் பணிக்கு சேர்ந்துவிட்டார்.
மருத்துவ அறிக்கையின் படி, மருத்துவர்கள் அவரை நான்கு வாரம் ஒய்வெடுக்க சொன்னார்கள். ஆனால், முன்னதாகவே அவர் பணியில் சேர்ந்துவிட்டார். அவர் இப்போதும் இந்திய விமானப் படையில்தான் பணியாற்றுகிறார். இந்திய விமானப் படை சட்டம் 1960-ன் படி விமானப் படையில் பணியாற்றுகிறவர்களுக்கு அரசியல் கட்சிகளில் சேர அனுமதியில்லை. இந்திய விமானப் படையில் பணியாற்றுகிறவர்கள், அந்த நபர் விங் கமாண்டர் அபிநந்தன் இல்லை என்று தீர்க்கமாக சொல்லுகிறார்கள் என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications