அதிகரித்த 500 ரூபாய் கள்ளநோட்டு.. ஆர்பிஐ சொன்ன அதிர்ச்சி தகவல்.. மக்களே கவனம்
டெல்லி: நம் நாட்டில் கள்ளநோட்டு புழக்கம் என்பது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக 500 ரூபாய் கள்ளநோட்டு என்பது ரூ.5.88 கோடிக்கு புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டில் 1.18 லட்சம் என்ற எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளநோட்டுகளை ஒழிக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கூட கள்ளநோட்டுகள் என்பது முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. ஆங்காங்கே கள்ளநோட்டுகளை விஷமிகள் புழக்கத்தில் விட்டு கொண்டே தான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் நம் நாட்டில் கடந்த நிதியாண்டில் அதிகமாக 500 ரூபாய் நோட்டுகள் தான் கள்ளநோட்டுகளாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2024-25ம் நிதியாண்டில் ரூ.5.88 கோடி மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கையில் பார்த்தால் 1.18 லட்சம் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அதிகமாகும். ஏனென்றால் கடந்த 2023-24ம் ஆண்டில் 85,711 என்ற எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4.28 கோடியாகும்.
அதேபோல் ரூ.65.32 லட்சம் மதிப்பிலான 200 ரூபாய் கள்ளநோட்டுகள் (32,660) கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 2023-24ம் ஆண்டை ஒப்பிடும்போது 13.9 சதவீதம் அதிகமாகும். அந்த ஆண்டில் ரூ.57.34 லட்சம்மதிப்பிலான 200 ரூபாய் கள்ளநோட்டுகள் (28,672 எண்ணம்) கண்டறியப்பட்டது.
தற்போது அதிகம் புழக்கத்தில் இல்லாத 2000 ரூபாயை கள்ளநோட்டாக பயன்படுத்துவது குறைந்துள்ளது. கடந்த 2024-25ம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் 3,508 மட்டுமே கண்டறியப்பட்டது. ஆனால் கடந்த 2023-24ம் ஆண்டில் 26,035 என்ற அளவில் 2 ஆயிரம் ரூபாய் கள்நோட்டுகள் சிக்கியது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் கடந்த 2023-24ம் ஆண்டில் 2.22 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் கண்டறியப்பட்டன. ஆனால் இந்த முறை 2.17 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது என்பது தான். மேலும் தற்போதைய கள்ளநோட்டுகளில் 4.7 சதவீதம் ரிசர்வ் வங்கியிலும், 95.3 சதவீதம் பிற வங்கிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நம் நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் கள்ளநோட்டுகள் பெரும் பிரச்சனையாக உள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் நம்நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முக்கிய நோக்கம் என்பது கள்ளநோட்டுகளை ஒழிப்பது தான். ஆனாலும் கூட தொடர்ந்து கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருந்து கொண்டே தான் உள்ளது. இந்த கள்ளநோட்டுகளை முழுமையாக இப்போது வரை ஒழிக்கப்படவில்லை. இருப்பினும் அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications