அதிகரித்த 500 ரூபாய் கள்ளநோட்டு.. ஆனா மண்டை மேல இருந்த கொண்டையை மறந்து.. மாட்டிக்கின்னாரு ஒர்த்தரு
டெல்லி: நம் நாட்டில் தற்போது ரூ.500 ரூபாய் நோட்டுக்கு மாற்றாக புது வகையான கள்ளநோட்டு புழக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த 500 ரூபாய் கள்ளநோட்டு எப்படி இருக்கும்? அதனை கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி வங்கிகள், செபி, சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நம் நாட்டில் அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு என்றால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு தான். ஆனால் தற்போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மக்களிடம் அதிகமாக புழக்கத்தில் இல்லாத நிலை உள்ளது. பலரும் ரூ.2,000 நோட்டுகளை சேமித்து வைத்து கொண்டுள்ளனர்.

இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு அடுத்ததாக பெரிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு என்றால் 500 ரூபாய் நோட்டு தான். இதுதான் தற்போது மக்களிடம் அதிகமாக புழக்கத்தில் உள்ளது. 200, 100 மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை போல் 500 ரூபாய் நோட்டும் சாதாரணமாக அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ளது.
இதனை சாதகமாக பயன்படுத்தி தான் தற்போது சில விஷமிகள் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட தொடங்கி உள்ளனர். கடந்த மாதத்தில் இருந்து 500 ரூபாய் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரிடம் இருந்து 500 ரூபாய் நோட்டை வாங்கும்போது அதனை முறையாக செக் செய்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நம் நாட்டில் தற்போது
புதுவகையான 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளது. சமீபகாலமாக இந்த போலி ரூபாய் நோட்டின் புழக்கம் என்பது அதிகரித்துள்ளது. பொதுவாக ரூபாய் நோட்டின் மேல்பகுதியில் RESERVE BANK OF INDIA என்று எழுதப்பட்டு இருக்கும். ஆனால் இந்த கள்ள ரூபாய் நோட்டில் 'RESERVE' என்ற சொல் தவறாக இருக்கும். ‛RESERVE' என்ற சொல் ‛RASERVE' என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அதாவது R என்ற எழுத்துக்கு அடுத்த 2வதாக 'E' என்ற எழுத்து வருவதற்கு பதில் தவறாக 'A' என அச்சிடப்பட்டு இருக்கும். இதுதான் 500 ரூபாய் கள்ளநோட்டாகும்.
இந்த 500 ரூபாய் கள்ளநோட்டு பார்க்க உண்மையான 500 ரூபாய் நோட்டு போலவே இருக்கும். இதனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இதுதொடர்பாக வங்கிகள், செபி, சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு்ள்ளது. கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களை கண்டுபிடிக்க என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் விசாரணையை தொடங்கி உள்ளன'' என கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் பொதுமக்கள் ஒருவரிடம் இருந்து 500 ரூபாய் நோட்டை வாங்கும்போது அது கள்ளநோட்டா? என்பதை செக் செய்து வாங்க வேண்டும். குறிப்பாக RESERVE என்ற சொல் சரியாக இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை தவறாக இருந்தால் அந்த நோட்டை அவரிடமே கொடுத்துவிட வேண்டும். இதன்மூலம் கள்ளநோட்டால் ஏமாறாமல் இருக்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications