திக்...திக்...நாளை பட்ஜெட்...700 வாகனங்களில் விவசாயிகள்...என்ன நடக்கும் ?
டெல்லி : நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விவசாயிகளின் போராட்டம் மீண்டும் தீவிரமடைய துவங்கி உள்ளது. இதனால் நாளை என்ன நடக்குமோ என்ற பதற்றம் அதிகரித்துள்ளது.
நாளை காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கொரோனா தாக்கத்திற்கு பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பு மக்களிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக வரி சலுகைகள், கூடுதல் நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதற்கிடையில் விவசாயிகளின் போராட்டமும் மீண்டும் தீவிரமடைய துவங்கி உள்ளது. குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட கலவரத்தின் பதற்றம் இதுவரை தணிந்தபாடில்லை. டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும், எல்லைப் பகுதியில் அவர்கள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். அதனால் அங்கு பாதுகாப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 67 வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வரும் விவசாயிகள், பட்ஜெட் நாளில் பார்லிமென்ட் நோக்கி பேரணி செல்ல போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதற்காக பஞ்சாப்பில் இருந்து டிராக்டர், கார் என 700 வாகனங்களில் விவசாயிகள் டெல்லியின் திக்ரி எல்லை நோக்கி புறப்பட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு தயார் என பிரதமரும், விவசாய சங்கத்தினரும் நேற்று அறிவித்த பிறகும் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாளை என்ன நடக்குமோ என்ற பதற்றம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.