எல்லையை உடைத்து.. டெல்லி உள்ளே "மீண்டும்" செல்ல திட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் விவசாயிகள் போராட்டம்
டெல்லி: டெல்லி எல்லையில் தற்போது போராடி வரும் விவசாயிகள் டெல்லிக்குள் சென்று மீண்டும் போராட்டம் நடத்தும் திட்டத்தில் உள்ளனர்.
100 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் செய்து வருகிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் பகுதியில் இவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் நடந்து வரும் இந்த விவசாயிகள் போராட்டம் நாட்டையே உலுக்கி உள்ளது.
டெல்லி எல்லையில் தற்போது போராடி வரும் விவசாயிகள் டெல்லி எல்லையை தாண்டி உள்ளே சென்று மீண்டும் போராட்டம் நடத்தும் திட்டத்தில் உள்ளனர். குடியரசு தினத்தின் போது டெல்லிக்குள் இவர்கள் சென்றது போல மீண்டும் உள்ளே செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக விவசாய போரட்டத்தை ஒருங்கிணைக்கும் ராகேஷ் திகாய்த் முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நேற்று ஜெய்ப்பூரில் பேசிய ராகேஷ், விவசாய போராட்டங்கள் இனிதான் விஸ்வரூபம் எடுக்கும். விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து மீண்டும் டெல்லிக்குள் செல்ல வேண்டும். டெல்லி உள்ளே சென்று போராட வேண்டும். இதற்கு எல்லோரும் தயாராக இருங்கள்.
நம்மை இந்த அரசு ஜாதி,மதத்தை வைத்து பிரிக்க பார்த்தது. நம்மை அவர்களால் பிரிக்க முடியவில்லை. நாம் டெல்லி நோக்கி மீண்டும் முன்னேற வேண்டும். பாராளுமன்றத்தில் நாம் விவசாய பொருட்களை விற்று போராட்டம் செய்ய வேண்டும்.
இந்த 3 சட்டங்களை திரும்ப பெற்று, குறைந்தபட்ச ஆதார விலைக்காக புதிய சட்டத்தை கொண்டு வரும் வரை இந்த போராட்டம் கண்டிப்பாக தொடரும் என்று ராகேஷ் அறிவித்துள்ளார். விரைவில் இவர்கள் மீண்டும் டெல்லி எல்லையை உடைத்து உள்ளே செல்ல முயற்சிப்பார்கள் என்று கூறப்படுகிறது.