25-வது நாளை எட்டிய போராட்டம்... மத்திய அரசுக்கு விவசாயிகள் புதிய எச்சரிக்கை!
புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டி கடும் குளிரையும், பல்வேறு இன்னல்களையும் தாங்கி விவசாயிகள் 25-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் எந்த இறுதி முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
வேளாண் சட்டத்தை திரும்பப் பெற முடியாது என மத்திய அரசும், வேளாண் சட்டத்தை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகளும் திட்டவட்டமாக கூறியுள்ளனர். உத்தரபிரதேசத்திற்கும் டெல்லிக்கு இடையிலான காசிப்பூர் எல்லையைத் தடுப்பதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விவசாயிகள் தொடர் போராட்டம்
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 25-வது நாளை எட்டியுள்ளது. ஏற்கெனவே டெல்லியில் உள்ள அனைத்து எல்லையையும் முடக்கி போராட்டத்தை தீவிரப்படுத்திய விவசாயிகள் உத்தரபிரதேசத்திற்கும் டெல்லிக்கு இடையிலான காசிப்பூர் எல்லையைத் தடுப்பதாக எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது முதல் தற்போது வரையிலான முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

அச்சம் கொண்டனர்
ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த ஏ.பி.எம்.சி. மண்டிகளுடன், தனியார் துறையினரும் ஒப்பந்த அடிப்படையில் வேளாண் உற்பத்தி, கொள்முதல், சேமிப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட இந்தச் சட்டங்கள் வகை செய்கின்றன.இந்தச் சட்டங்கள் தனியாருக்குதான் குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) நடைமுறை கைவிடப்படுவதால் தங்கள் சிரமத்துக்கு ஆளாவோம் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

கடும் மோதல்
இதனை அடுத்து தான் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடங்கினர். நவம்பர் மாத இறுதியில் பஞ்சாப்பில் இருந்து ஹரியானா வழியாக டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியை துவக்கினார்கள். அப்போது ஹரியானா போலீசார் எல்லையில் விவசாயிகளை தடுத்து நிறுத்தியபோது, அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.

அடியெடுத்து வைத்தனர்
கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி ஆகியவற்றை தாண்டி ஹரியானா எல்லைக்குள் நுழைந்து விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டனர். ஆனால் செல்லும் வழியெங்கும் அவர்கள் பல்வேறு தடைகளை சந்திக்க வேண்டியதிருந்தது.
டெல்லி எல்லையான சிங்கு பகுதிக்கு சென்றபோது, அங்கும் போலீசாருக்கும், விசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. பல்வேறு இன்னல்களை பெற்று ஒரு வழியாக விவசாயிகள் டெல்லிக்கு நுழைந்தனர். அதன்பிறகு தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்த தொடங்கினார்கள்.

கிடைக்கவில்லை
விவசாயிகள் போராட்டத்துக்கு இந்தியாவில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. வெளிநாட்டில் இருந்தும் ஆதரவு குரல்கள் எழுந்து வருகின்றன. வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறி வரும் மத்திய அரசு விவசாயிகளுடன் இதுவரை பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டனர். ஆனால் இதில் எதுவும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.

குற்றசாட்டு
இந்தியாவில் சில அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்கள் பெற்ற விருதுகளை திருப்பி கொடுத்து விட்டனர். மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த துன்பமும் ஏற்பட்டது என்றும், விவசாயிகள் போராட்டத்தை அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்து கின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.

பதிலடி
பிரதமர் நரேந்திர மோடியும் இதனையே கூறியதுடன் வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு வருமானம் கொடுக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் போராட்டக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விவசாயிகளின் அமைப்புகளில் ஒன்றான அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு எழுதி உள்ளது.

அனைவரின் எதிர்பார்ப்பு
கடும் குளிர் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட சில விவசாயிகள் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனும் பல்வேறு இன்னல்கள், துன்பங்களை தாங்கி விவசாயிகள் இரண்டு முழு அடைப்பு போராட்டத்தையும் நடத்தி விட்டனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே ஒரே தீர்வு என்ற வகையில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications