சூப்பர் நியூஸ்.. இன்னும் 4-6 வாரங்களில் கோவாக்சினுக்கு WHO அனுமதி? சவுமியா சுவாமிநாதன் முக்கிய தகவல்
டெல்லி: இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக 4 முதல் 6 வாரங்களில் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் பாதிப்பு இன்னும் அனைத்து நாடுகளிலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா வேக்சின் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் இதற்காக கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி, மாடர்னா ஆகிய வேக்சின்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின்
கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதல் தடுப்பூசியாகும். இருப்பினும், இந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோவாக்சினுக்கு அவசரக் கால ஒப்புதல் வேண்டி, ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.

பரிசீலனை
இந்நிலையில், சமீபத்தில் நடந்து வெப்பினாரில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன், "கோவாக்சின் குறித்த சில முக்கிய தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் அனுப்பியுள்ளனர். அதை வல்லுநர்கள் முறையாகப் பரிசீலனை செய்து வருகின்றனர். அவசரக்கால ஒப்புதல் பெற ஒரு நிறுவனம் மூன்றாம் கட்ட சோதனைகளை முழுவதுமாக முடித்திருக்க வேண்டும். கோவாக்சின் தடுப்பூசியின் சோதனை முடிவுகள் இப்போது தான் எங்களுக்குக் கிடைத்துள்ளது.

4 முதல் 6 வாரங்களில் முடிவு
கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன், உற்பத்தி முறை என அனைத்தையும் ஆராய்ந்து வருகிறது. கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இன்னும் 4 முதல் 6 வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும். இதுவரை நாங்கள் ஆறு தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளோம். தற்போது கோவாக்சினின் விண்ணப்பத்தைத் தான் பரிசீலனை செய்து வருகிறோம்" என்றார்.

கொரோனா தடுப்பூசிகள்
உலக சுகாதார அமைப்பு இதுவரை அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன், பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்களின் தடுப்பூசி, சீனாவின் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகில் தற்போது 105 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன. அவற்றில் 27 வேக்சின்கள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. அதேபோல 184 தடுப்பூசிகள் ஆய்வு நிலையில் உள்ளன.

டெல்டா கொரோனா
மேலும், டெல்டா கொரோனா குறித்துப் பேசிய அவர், "டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக முழு தடுப்பாற்றலை பெற இரண்டு டோஸ் வேக்சின்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது உயிரிழப்பைத் தடுக்கும் என்றாலும்கூட வைரஸ் பாதிப்பு என்பது ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தான் பொதுமக்களை மாஸ்க் அணியச் சொல்லி நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்" என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications