வார்த்தை தடுமாறியது.. உடல் சோர்வு.. பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்க முடியாத நிர்மலா சீதாராமன்
Recommended Video
டெல்லி: 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை முழுமையாக வாசித்து முடிக்க முடியாமல் சோர்வடைந்து உட்கார்ந்துவிட்டார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
காலை 11 மணியளவில் பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன். பல்வேறு வகையான அறிவிப்புகளுடன் சேர்ந்து திருக்குறள், ஆத்திச்சூடி, காளிதாசரின் கவிதை உள்ளிட்டவற்றை மேற்கோள்களைக் காட்டி அவர் தொடர்ந்து உரையாற்றினார்.

மதியம் சுமார் 1.40 மணி அளவில், அதாவது அவர் பட்ஜெட் உரையை ஆரம்பித்து சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் ஆகிய நேரத்தில், அவருக்கு கடுமையான உடல் சோர்வு ஏற்பட்டது. தண்ணீர் எடுத்து வருமாறு ஊழியர்களை கேட்டுக்கொண்டார். தண்ணீர் குடித்த பிறகும் கூட அவரது வாய் குளறியது. பேச்சு தடுமாறியதை கேட்க முடிந்தது.
அவரால் பட்ஜெட் உரையில் உள்ள சொற்களை அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கக் கூட முடியவில்லை. இதனால் அருகே அமர்ந்திருந்த மூத்த அமைச்சரான ராஜ்நாத்சிங், பட்ஜெட் உரையை வாசிக்க வேண்டாம், லோக்சபாவில் உரையை சமர்ப்பித்து விட்டதாக கூறி விட்டு அமருங்கள் என்று கட்டாயப்படுத்தினார்.

ஆனால் முதலில் அதை நிர்மலா சீதாராமன் கேட்கவில்லை. இன்னும் இரண்டு பக்கங்கள் தான் இருக்கிறது, வாசித்து விடுகிறேன் என்று கூறி மறுபடியும் வாசிக்க ஆரம்பித்தார். ஆனால், அவரால் முழுமையாக வாசிக்க முடியாத அளவுக்கு வார்த்தைகள் தடுமாறின.
ஒருகட்டத்தில் இதற்கு மேலும் நின்றுகொண்டு வாசிக்க முடியாது என்பதை உணர்ந்த அவர் பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன் என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டார்.
எனவே அவர் முழுமையாக பட்ஜெட் உரையை வாசித்து முடிக்கவில்லை. இறுதியாக அவர் மறைமுக வரி விதிப்புகள் தொடர்பான அறிவிப்புகளை வாசித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்மலா சீதாராமனுக்கு முன்பாக நிதியமைச்சராக இருந்த, மறைந்த அருண் ஜெட்லியும் உடல்நலக்குறைவு காரணமாக அமர்ந்த நிலையிலேயே பட்ஜெட் உரையை வாசித்தது வரலாறு.












Click it and Unblock the Notifications