தமிழ்நாடுனாலே பிரதமர் மோடிக்கு ஏக பிரியம்! நிர்மலா சீதாராமன் சொன்னதை நோட் பண்ணீங்களா! ஓபன் பேட்டி
டெல்லி: தமிழ்நாடு என்றாலே பிரதமர் நரேந்திர மோடிக்கு தனி மதிப்பும், மரியாதையும் உண்டு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 72-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது; ரத்ததானம் முகாம்களை நடத்துவது; அன்னதானம் வழங்குவது என ஒவ்வொரு மாநிலத்திலும் மோடியின் பிறந்தநாளை பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக, வட மாநிலங்களில் மோடியின் பிறந்தநாள் படு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கலை நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைக்கட்டி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி பற்றிய புத்தகம்.. மேலாண்மை புத்தகமாக பயன்படுத்தலாம்.. சொல்கிறார் நிர்மலா சீதாராமன்!
மனிதாபிமானம் மிக்க தலைவர்
இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள். அவருக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் என இந்த நாளில் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் எனக்கு இரண்டு அனுபவங்கள் உண்டு. அதில் ஒரு தருணத்தில்தான் அவர் மிகவும் மனிதாபிமானம் மிக்கவர் என்பதை தெரிந்து கொண்டேன். ஒக்கி புயலின் போது என்னை அழைத்த பிரதமர் மோடி, தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளையும், மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் அறிந்து வருமாறு கூறினார்.
மீனவர்களை காப்பாற்றுவதில் உறுதி
அப்போது அவர் தமிழகத்தின் கடைக்கோடி பகுதிக்கும், கேரள எல்லை வரைக்கும் என்னை அனுப்பியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. புயலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எப்படி கையாள வேண்டும்; பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை பிரதமர் எனக்கு அறிவுறுத்தினார். ஒக்கி புயலின் போது கடலுக்கு சென்று கரை திரும்பாமல் இருந்த தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை எடுத்தது.
"கடைசி மீனவர் திரும்பும் வரை.."
காணாமல் போன ஒவ்வொரு மீனவர்களையும் மீட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி மிகவும் உறுதியாக இருந்தார். இதுதொடர்பாக எனக்கும் அவர் அறிவுறுத்தல்களை வழங்கினார். இதற்காக, கடற்படை, விமானப்படைகளுக்கு சொந்தமான அனைத்து படகுகளையும் பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டோம். கடைசி மீனவர் வீடு திரும்பும் வரை வரை உங்கள் முயற்சியை கைவிடக் கூடாது என மோடி அறிவுறுத்தி இருந்தார்.
தமிழகம் மீது தனி மரியாதை
சில தினங்களுக்கு முன்பு கூட இலங்கை கடற்படையினரால் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்டோ கொல்லப்பட்ட செய்தி தெரியவந்தது. அப்பொழுதும், பிரதமர் மோடி என்னிடம், அந்தப் பகுதிக்கு நேரடியாக சென்று பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கூறினார். இதையடுத்து, நான் அங்கு சென்று உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதன் பின்னரே அந்த மீனவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இவ்வாறு தமிழ்நாடு என்றாலே பிரதமர் நரேந்திர மோடிக்கு தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. தமிழகத்தின் இலக்கியங்களை பற்றி பிரதமர் மோடி பலமுறை பேசி இருக்கிறார். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.