ஜிஎஸ்டி இழப்பீடு எங்கே... நீட் ஜெஇஇ... ஒத்தி வைக்க வேண்டும்... பஞ்சாப் முதல்வர் கொதிப்பு!!
டெல்லி: கொரோனா கால கட்டத்தில் மாநிலத்தின் மொத்த நிதியும் காலியாகிவிட்டது. ரூ. 500 கோடி செலவழித்து விட்டோம். நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை நிறுத்திக் வைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள் அனைவரும் இணைந்து மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று இன்று சோனியா காந்தி கூட்டியிருந்த ஏழு மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் கோரிக்கை வைத்தார்.
நாட்டில் கொரோனா தொற்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் நீட், ஜெஇஇ தேர்வுகளை நடத்துவது சரியில்லை, ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றன. இருந்தபோதும், தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் நேற்று வெளியாகி இருந்தது. ஏற்கனவே ஜெஇஇ தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இருந்த நிலையில், நீட் தேர்வுகளுக்கு இன்று ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
நீட்,ஜேஇஇ தேர்வுகளை நடத்தினால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்- மத்திய அரசுதான் பொறுப்பு: நாராயணசாமி
அசோக் கெலாட்
இந்த நிலையில் நீட், ஜெஇஇ தேர்வு குறித்து ஏழு மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று காணொளி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், பாண்டிச்சேரி முதல்வர் வி நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு துரோகம்
இந்தக் கூட்டத்தில் தேசியக் கல்விக் கொள்கை, நீட்-ஜெஇஇ தேர்வு, ஜிஎஸ்டி இழப்பீடு, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வரைவு அறிக்கை ஆகியவை குறித்து சோனியா காந்தி பேசினார். அப்போது, ''மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை கொடுக்காமல் இருப்பது மக்களுக்கு மோடி அரசு செய்திருக்கும் துரோகம். முதல்வர்கள் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே வைத்திருக்கும் கோரிக்கைகளின்படி மாநிலங்களுக்கான நிதி கிடைப்பதற்கும், உரிமைகள் கிடைப்பதற்கும் இணைந்து போராட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்'' என்றார்.
அமரிந்தர் சிங்
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பேசுகையில், ''கொரோனா கால கட்டத்தில் மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இதுவரை அரசு 500 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. நடப்பாண்டில் மாதிலத்தின் வருவாய் பற்றாக்குறை 25,000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.. எங்களது மாநிலத்தில் நிதிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி நிதியை எங்களுக்கு கொடுக்கவில்லை. மம்தா பானர்ஜி கூறியது போல் இந்த நிதியைப் பெறுவதற்கு முதல்வர்கள் அனைவரும் இணைந்து பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும்.
இங்கு இருக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்றத்தில் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை நிறுத்தி வைக்குமாறு மனு தாக்கல் செய்ய வேண்டும்'' என்றார்.
உத்தவ் தாக்கரே
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜி பேசுகையில், ''அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும். இது மிகவும் சீரியஸான விஷயம்'' என்றார். இவரைத் தொடர்ந்து பேசி இருந்த உத்தவ் தாக்கரே, ''நாம் மத்திய அரசைப் பார்த்து பயந்து கொண்டு இருக்கிறோமா அல்லது போராட தயாராக இருக்கிறோமா என்பது குறித்து முதலில் முடிவு செய்ய வேண்டும்'' என்றார்.