டெல்லி அரியணையில் அமரும் ரேகா குப்தா.. முதல்முறை எம்எல்ஏ டூ முதலமைச்சர்.. தேர்வானது எப்படி?
டெல்லி: டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லி சட்டசபைக்கு முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா, நாளை நடக்கவுள்ள பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். டெல்லி மக்களின் பிரச்சனைகள் குறித்த புரிதல் மற்றும் ஆர்எஸ்எஸ் உடனான தொடர்பு ரேகா குப்தா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட காரணமாக பார்க்கப்படுகிறது.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிபெற்று 27 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்துள்ளது. பிப்.8ஆம் தேதியே முடிவுகள் தெரிய வந்தாலும், டெல்லி முதலமைச்சர் யார் என்ற கேள்வி மக்களிடையே இருந்து வந்தது. இதனிடையே டெல்லி முதலமைச்சர்களுக்கான ரேஸில் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் வர்மா, ரேகா குப்தா மற்றும் விஜயேந்தர் குப்தா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. பாஜக பார்வையாளர்களாக ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் தன்கர் ஆகியோரின் முன்னிலையில் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி சட்டசபைக்கு முதல்முறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர் ரேகா குப்தா.
இவர் டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். ஹரியானாவைச் சேர்ந்த பெண்ணான, ரேகா குப்தா, டெல்லி பல்கலைக்கழகத் தேர்தலில் போட்டியிட்டவர். அதேபோல் 3 முறை கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், தெற்கு டெல்லியின் மேயராகவும் இருந்தவர். அதுமட்டுமல்லாமல் பாஜக மகளிரணியின் துணைத் தலைவராகவும், தெற்கு டெல்லியின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.
இவர் டெல்லியின் 9வது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பாகவும் ஷீலா தீக்சித், ஆம் ஆத்மியின் அதிஷி ஆகியோர் பெண் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர். அந்த வகையில் பாஜக தரப்பிலும் பெண் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். டெல்லி மக்களின் பிரச்சனைகள் குறித்து நன்கு அறிந்தது மற்றும் ஆர்எஸ்எஸ் உடனான தொடர்பு ஆகியவை ரேகா குப்தா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை பதவியேற்பு விழா நடக்கவுள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை மதியம் பாஜக அரசு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் பதவியேற்கும் போது அவருடன் 6 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications