1963-ல் முதல் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்தித்த நேரு! இந்திராவுக்கு எதிராக 15 முறை தீர்மானம்!
டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக "இந்தியா" கூட்டணி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை லோக்சபாவில் கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த விவாதம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம்: நாடு விடுதலை அடைந்த பின்னர் 1963-ம் ஆண்டுதான் முதல் முதலாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம், கொண்டு வரப்பட்டது. சீனாவுடனான இந்தியாவின் யுத்தம் முடிந்த தருணம்.. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எதிராக முதுபெரும் தலைவர் ஜேபி கிருபாளினி, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் 4 நாட்கள் மொத்தம் 21 மணிநேரம் விவாதம் நடைபெற்றது. அத்தீர்மானத்துக்கு எதிராக 347 எம்.பிக்களும் ஆதரவாக 62 பேரும் வாக்களித்தனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் நேருவின் அரசு தப்பியது.

இந்திரா காந்தி: இந்தியாவிலேயே அதிமுக முறை நம்பிக்கை இல்லா தீர்மானங்களை எதிர்கொண்டவர் நேருவின் மகளான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார்தான். 1966-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டு இந்திரா ஆட்சிக் காலத்தில் மொத்தம் 15 முறை நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானங்களை அதிக முறை கொண்டு வந்தவர் மறைந்த முதுபெரும் இடதுசாரித் தலைவர் ஜோதிபாசு.
ஆண்டுகளில் நம்பிக்கை இல்லா தீர்மானம்: 1961-ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்தில் லோக்சபாவில் 12 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டன; 1971-ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை 6 முறையும் 1981-90 கால கட்டத்தில் 4 முறையும் 1991-2000ம் ஆண்டுகளில் 3 முறையும் 2001-2010 காலத்தில் 1 முறையும் நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டன.

பிரதமர்களும் நம்பிக்கை இல்லா தீர்மானங்களும்: நாட்டின் பிரதமர்களைப் பொறுத்தவரையில் நேரு ஒரு முறையும் லால் பகதூர் சாஸ்திரி 3 முறையும் இந்திரா காந்தி அம்மையார் 15 முறையும் மொரார்ஜி தேசாய் 2 முறையும் ராஜீவ் காந்தி ஒரு முறையும், நரசிம்மராவ் 3 முறையும் வாஜ்பாய் ஒரு முறையும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொண்டனர். தற்போதைய பிரதமர் மோடியும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முதல் முறையாக இப்போதுதான் எதிர்கொள்கிறார்.
மொரார்ஜி ராஜினாமா: இதில் 1979-ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது ஒய்பி சவாண் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் அப்போதைய ஜனதா அரசு கவிழ்ந்து மொரார்ஜி தேசாய், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது வரலாறு.












Click it and Unblock the Notifications