புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்கு ரூ.50,000 கோடியில் திட்டம்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி: பிரதமரின் கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டம் குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து வருகிறார். 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, திட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களை ஈடுபட வைக்க உள்ளதாக அவர் உறுதியளித்தார்.
பிரதமரின் கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டத்தின் துவக்கமாக இந்த செய்தியாளர் சந்திப்பு, அமைந்திருந்தது. இடம் பெயர் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பொதுப் பணித்துறை மூலமாக வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய திட்டம் இதுவாகும்.
ஜூன் மாதம் 20ஆம் தேதி பீகாரில் முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார். இது தொடர்பான விளக்கத்தை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க அறிவுறுத்தியுள்ளோம். ஜல்ஜீவன், வீடுகட்டும் திட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். பொருளாதார இழப்பை சரிகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களுக்கு பெருமளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். அவர்களின் திறன் சார்ந்த பணிகளை மத்திய, மாநில அரசுகள் மிக நுணுக்கமாக தயாரித்துள்ளன. கரீப் கல்யான் ரோஜ்கார் அபியான் திட்டத்தின்கீழ், 25 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.