"இந்தியா" கூட்டணி மும்பை மீட்டிங்- "டவுட்" லிஸ்ட்டில் சரத்பவார், நிதிஷ்குமாருடன் "லாலு"-சிபிஐ வேகம்!
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ள "இந்தியா" கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரான பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் சிபிஐ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் "இந்தியா" கூட்டணியின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இக்கூட்டணியின் 2-வது கூட்டம் நடைபெற்றது. பெங்களூர் கூட்டத்தில் கூட்டணிக்கு "இந்தியா" என பெயரிடப்பட்டது.

இதனையடுத்து "இந்தியா" கூட்டணியின் குறைந்தபட்ச பொது செயல் திட்டம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்னும் சில நாட்களில் "இந்தியா" கூட்டணி கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் படுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேநேரத்தில் மும்பை கூட்டத்துக்கு "இந்தியா" கூட்டணியின் மூத்த தலைவர்களான தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத்பவார், ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்பது கேள்விக்குறியாக எழுந்துள்ளது. சரத்பவாரின் என்சிபி கட்சியை ஒட்டுமொத்தமாக பாஜக பக்கம் இழுப்பதற்காக படுமும்முரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது. அத்துடன் சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் பாஜக நிறுவனர் வாஜ்பாய் நினைவிடத்துக்கு நேரில் சென்று நிதிஷ்குமார் அஞ்சலி செலுத்தினார். இதனால் சரத்பவார், நிதிஷ்குமார் ஆகியோர் மும்பை கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வரான ராஷ்டிரிய ஜனதா தள நிறுவனத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்துக்கு போயிருக்கிறது சிபிஐ. லாலு பிரசாத் யாதவ், "இந்தியா" கூட்டணியின் மூத்த தலைவர்களில் ஒருவர். பிரதமர் மோடி மற்றும் பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சிப்பவர். ஆகஸ்ட் 15-ந் தேதி பிரதமர் மோடி, டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி பேசுகையில் அடுத்த ஆண்டும் தாமே சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவேன் என பேசியிருந்தார். இதனை கிண்டலடித்த லாலு பிரசாத் யாதவ், மோடியின் பிரிவு உபசார உரைதான் அது என கூறியிருந்தார்.

தற்போது ஜாமீனில் வெளியே வந்து தீவிர அரசியலில் லாலு பிரசாத் யாதவ் ஈடுபட்டு வருகிறார். இதனைத் தடுக்கும் வகையிலேயே லாலுவின் ஜாமீனை ரத்து செய்ய கோரி இருக்கிறது சிபிஐ என்கின்றன எதிர்க்கட்சிகள். சிபிஐ-ன் இந்த மனு மீது வரும் 25-ந் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. இந்த விசாரணைக்குப் பின்னரே மும்பை கூட்டத்துக்கு லாலு வருவாரா? அல்லது மீண்டும் சிறைக்குப் போவாரா? என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications