உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை! விமானத்தில் வந்த கேள்விக்கணைகள்! சிக்கிய அமைச்சர் ஸ்மிருதி இரானி
டெல்லி : பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை விமானத்தில் வழிமறித்து, காங்கிரஸ் மகளிர் பிரிவின் செயல் தலைவி நெட்டா டிசோசா பரபரப்பான வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 16 நாட்களில் 14 முறை உயர்த்தப்பட்டு, லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களாக விலை உயர்வு இல்லாத நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 105.41 ரூபாயாகவும், டீசல் 96.67 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வர்த்தக தலைநகரான மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 120.51 ஆகவும், டீசல் லிட்டருக்கு 104.77 ஆகவும் விற்கப்படுகிறது.

எரிபொருள் விலை உயர்வு
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக எரிபொருள் விலை சீராக இருந்தது. சமீபத்தில் தேர்தல் நடந்த நான்கு மாநிலங்களையும் தக்கவைத்துக் கொண்ட பாஜகவின் தேர்தல் உத்தி இது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் தான் விலை உயர்வுக்குக் காரணம் எனவும், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, இலங்கை போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் 5 சதவீதம் மட்டுமே விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
இந்நிலையில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை விமானத்தில் வழிமறித்து, காங்கிரஸ் மகளிர் பிரிவின் செயல் தலைவி நெட்டா டிசோசா பரபரப்பான வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிரிதி இரானி, நேற்று தலைநகரான டெல்லியில் இருந்து கவுகாத்திக்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். அவர் பயணம் செய்த விமானம் கவுகாத்தியில் தரையிறங்கிய நிலையில், அதிலிருந்த பயணிகள் கீழே இறங்கினர்.

கடும் வாக்குவாதம்
அப்போது, விமானத்தில் அமர்ந்திருந்த ஸ்மிரிதி இரானியிடம் அதே விமானத்தில் பயணித்த, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயல் தலைவர் நேட்டா டிசவுசா சென்றார். அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆரம்பத்தில் காங்கிரஸ் பெண் தலைவர் "வழியைத் தடுப்பதாக" கூறினார். சமையல் காஸ் தட்டுப்பாடு, கேஸ் இல்லாத அடுப்புகள் குறித்து கேட்டதற்கு, 'தயவு செய்து பொய் சொல்லாதீர்கள்' என அமைச்சர் கூறியதாக தெரிகிறது.
அப்போது பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு குறித்து இரானியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்மிரிதி இரானி, ''வழியை மறிக்காதீர்கள். பின்னால் உள்ள பயணிகள் இறங்க வேண்டியுள்ளது'' என்று அவரை பார்த்து கூறினார்.

சம்பவம் குறித்து விசாரணை
பின்னர், விமானத்தை விட்டு இறங்கிக் கொண்டிருந்தபோது, நேட்டோ டிசவுசாவிடம் பேசிய ஸ்மிரிதி இரானி, ''கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு 27 மாதங்களாக இலவச உணவு தானியம் கொடுத்தோம். நீங்கள் என்னை முற்றுகையிடாமல் இருந்தால் நன்றாக இருக்கும்'' என்று கூறினார். அதற்கு நேட்டா டிசவுசா, ''யாரையும் முற்றுகையிடவில்லை. நீங்கள் ஒரு மந்திரி'' என்று கூறினார். உடனே இரானி, ''நான் பதில் சொல்கிறேன் மேடம்'' என்று கூறிவிட்டு, இலவச தடுப்பூசி பற்றி பேசத் தொடங்கினார். இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்த தனியார் விமான நிறுவனம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications