ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தது உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அதிரடி!
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து வழக்கில், மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஆளுநருக்கு மட்டுமின்றி குடியரசு தலைவருக்கும் காலெக்கெடு நிரணயித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. அதாவது ஆளுநர் அனுப்பும் மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்றும், தாமதம் ஏற்படின் அதற்கான காரணத்தை மாநில அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த விவகாரத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் ஆளுநர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. ஆளுநர், தமிழக அரசு இடையே சுமூக உறவு இல்லாமல் இருந்து வந்தது.

உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் தான் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், குறிப்பிட்ட கால வரம்புக்குள் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனு செய்திருந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதில், சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றிய பிறகு அந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் செயல்பாடு தவறு.
10 மசோதாக்களை கிடப்பில் போட்டது சட்ட விரோதம், ஒருதலைபட்சமானது. 10 மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்து இருப்பதற்கு ஆளுநருக்கு வீட்டோ போன்ற அதிகாரம் ஏதேனும் இருக்கிறதா? 10 மசோதாக்கள் சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பிறகு அவை மீண்டும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்" என்று அதிரடி தீர்ப்பளித்தது.
குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு
இந்த தீர்ப்பானது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று திமுக கூறியது. இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தின் 414 பக்க முழு தீர்ப்பு விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், குடியரசுத் தலைவருக்கும் மசோதா மீது முடிவு எடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது. ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கால தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணங்களை மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
* மாநில அரசுகள் நிறைவேற்றி ஆளுநர்களுக்கு அனுப்பும் மசோதாக்களை, அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் பட்சத்தில், குடியரசுத்தலைவர் அந்த மனு மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்.
* ஒரு வேளை 3 மாத கால இடைவெளிக்குள் முடிவு எடுக்க முடியவில்லை, தாமதம் ஏற்படும் என்றால், அதற்கான காரணத்தை மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
* காலக்கெடுவுக்குள் குடியரசுத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அவருக்கு எதிராக மாநிலங்கள் நீதிமன்றத்தை நாட முடியும்.
நீதிமன்றத்தை அனுகலாம்
* ஆளுநரை போலவே குடியரசுத் தலைவருக்கும் கூட மசோதாக்கள் மீது காலவரையின்றி முடிவெடுக்காமல் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.
* மாநிலங்களும் குடியரசுத் தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மசோதா மீது மத்திய அரசு அளித்த பரிந்துரைகளை மாநில அரசு விரைந்து பரிசிலீக்க வேண்டும்.
ஒரு வேளை மாநில அரசின் மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது என குடியரசு தலைவர் கருதினால் அவர் உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை பெறலாம். என்பது உள்ளிட்டவற்றை நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த தீர்ப்பு நகலை அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications