காஷ்மீர் தாக்குதல்: தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுங்க.. பாக். தூதரை அழைத்து கண்டித்த இந்தியா
டெல்லி:புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் எதிரொலியாக அந்நாட்டு தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 44 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதலை தொடர்ந்து, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூடியது. நாட்டின் பாதுகாப்பு, காஷ்மீரில் உள்ள நிலைமை மற்றும் அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந் நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹமூதுக்கு, வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே சம்மன் அனுப்பி உள்ளார். இதையடுத்து, பாகிஸ்தான் தூதர், டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அலுவலகத்திற்கு நேரில் வந்தார்.
அப்போது அவரிடம், புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தமது கடும் கண்டனத்தை தெரிவித்தார். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குழுக்கள், தனிநபர்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வெளியுறவு செயலாளர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாக்குதல், சம்மன், கண்டனம் ஆகிய நடவடிக்கைகளை தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.