காங். மிஷன் 2022-க்கு செட்பேக்- மாஜி மணிப்பூர் தலைவர் பாஜகவில் இணைந்தார்- 8 எம்.எல்.ஏக்கள் எஸ்கேப்?
டெல்லி: மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கோவிந்தாஸ் கொந்தவுஜம் இன்று டெல்லியில் பா.ஜ.க.வில் இணைந்தார். அவருடன் மேலும் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி வலிமையாக இருந்த வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும் பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால் மாநில கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது.
கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தம்வசமாக்கியது பாஜக. இதனால் மணிப்பூர் சட்டசபையில் காங்கிரஸ் பலம் 17 ஆக குறைந்தது. பாஜகவுக்கு தற்போது 24 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
கரூரில் ராத்திரி நேரம்.. மெயின்ரோட்டில்.. அது என்னது.. மிரண்ட வாகன ஓட்டிகள்
மாஜி காங். தலைவர் தாவல்
இந்த நிலையில் 6 முறை எம்.எல்.ஏ.வான மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த கோவிந்தாஸ் கொந்தவுஜம் திடீரென எம்.எல்.ஏ. பதவியையும் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் மணிப்பூர் சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 16 ஆக குறைந்தது. இதனைத் தொடர்ர்ந்து இன்று கோவிந்தாஸ் கொந்தவுஜம் டெல்லியில் பாஜகவில் இணைந்தார். தற்போதைய நிலையில் மேலும் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இணையக் கூடும் என்று கூறப்படுகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரும் பின்னடைவாகும்.
மணிப்பூர் தேர்தல்
மிஷன் 2022 என்ற பெயரில் 60 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கான அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டங்களையும் காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது. இந்த நிலையில் மாநில கமிட்டி தலைவராக இருந்த கோவிந்தாஸ் கொந்தவுஜம் கூண்டோடு பாஜகவுக்கு தாவுவதால் காங்கிரஸ் பலம் வெகுவாக குறைந்துவிட்டது.
திரிபுரா காங். கதி
திரிபுரா மாநிலத்தில் நிகழ்ந்த அதே சித்து விளையாட்டைத்தான் பாஜக இப்போது மணிப்பூரிலும் நிகழ்த்தியிருக்கிறது. திரிபுராவில் இடதுசாரிகள் ஆட்சியில் இருந்த போது பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தது. பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏகூட இல்லாத நிலை. ஆனால் மெல்ல மெல்ல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் என அனைவரையும் அப்படியே பாஜக ஐக்கியப்படுத்திக் கொண்டது. அவர்களுக்கே தேர்தலில் போட்டியிட சீட்டும் கொடுத்தது. இதனால் திரிபுராவில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.
பாஜக கூட்டணி அரசுகள்
தற்போது மணிப்பூரிலும் அதே நிலைமைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் மாநில கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தனி கூட்டணி அமைத்திருக்கிறது பாஜக. இப்போது வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவும் அதன் கூட்டணி பரிவாரங்களும்தான் ஆட்சியில் இருக்கின்றன.
மணிப்பூரில் காங். எதிர்காலம்?
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான அடிப்படை பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதேபோல் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பஞ்சாப், கோவா, மணிப்பூர் மூன்றும் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை தரக் கூடிய மாநிலங்கள். இதனால் பஞ்சாப் மாநிலத்தில் நீடித்த காங்கிரஸ் உட்கட்சி பூசலுக்கு தீர்வு கண்டது அக்கட்சி மேலிடம். ஆனால் மணிப்பூரில் நிலைமை கையை மீறிச் சென்று கொண்டே இருப்பதால் காங்கிரஸ் மேலிடம் எதுவும் செய்ய முடியாமல் திகைத்து போய் நிற்கிறது. இதனால் மணிப்பூரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி என்பது கனவாகத்தான் போகும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.