“பூணூல்” முதல் “திலகம்” வரை.. ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள்
டெல்லி: கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை தொடரும் என அம்மாநில உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக வைக்கப்பட்ட முக்கிய வாதங்களை பார்ப்போம்.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் முன்னணி வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.
“உச்சக்கட்ட” பரபரப்பில் குஜராத்.. நெருங்கும் தேர்தல்! ரூ.100 கோடி கள்ளநோட்டு - சிக்கியது எப்படி?
பூணூல் வாதம்
ஹிஜாப் தடைக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் காமத், தென் இந்தியாவை சேர்ந்தவர்கள் பள்ளிக்கு செல்லும்போது சந்தியா வந்தனம், பூணூல், ருத்ராக்ஷ போன்றவற்றை அணிகின்றனர். மத அடையாளங்கள் அணிந்து செல்லக்கூடாது என்பது மதசார்பின்மைக்கு எதிரானது. நாங்கள் நேர்மறையான மதசார்பின்மையை ஏற்கிறோம். ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் மத அடையாளத்தை மறைக்க வேண்டும் என்பது மதசார்பின்மை இல்லை. மூத்த வழக்கறிஞர் பராசரன் மத அடையாளத்துடன் இருக்கிறார். ஆனால் பொது நிலையை பாதிக்கவில்லை." என்று கூறினார்.
டர்பன்
ஹிஜாபுக்கு ஆதரவாக வாதாடிய மற்றொரு வழக்கறிஞர் பாஷா, "ஹிஜாப் அணிந்து செல்வதற்காக மாணவி பள்ளிக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். ஆனால் சிக்கியர்களும் டர்பன் அணிகிறார்கள். கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை என்று முஹம்மது கூறியதாக குறிப்பிட்டு உள்ளது. ஆனால் குர்ஆனில் ஹிஜாப் பற்றி இடம்பெற்று உள்ளது. குர்ஆனில் ஹிஜாப் 'கிமர்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கிமர் என்றால் தலையை முழுமையாக மறைத்தல் என்று ஆக்ஸ்போர்டு டிக்சனரியில் பொருள் உள்ளது." என்று கூறிய பாஷா இஸ்லாத்தின் கடமைகளை சுட்டிக்காட்டி விளக்கியதற்காக உச்சநீதிமன்றம் அவருக்கு பாராட்டு தெரிவித்தது.
எது ஹிஜாப்?
இந்த வழக்கில் ஹிஜாபுக்கு ஆதரவாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷீத், ஹிஜாப், புர்கா, ஜில்பாப் ஆகியவற்றின் புகைப்படங்களை காட்டிய மூன்றுக்குமான வித்தியாசங்களை விளக்கினார். "இஸ்லாத்தில் கடமை மற்றும் கடமை இல்லை என்ற இரட்டை நிலை கிடையாது. குர்ஆனில் இருப்பது எப்படி கடமையாக உள்ளதோ அதேபோல் முஹம்மது நபி தெரிவித்த கருத்துக்களும், போதனைகளும் கடமைதான். அனைவரும் மனதில்கொள்ள வேண்டிய முக்கியமான விசயம் இது." என்றார்.
நீதிபதி புட்டுசுவாமி தீர்ப்பு
இந்த வழக்கில் வாதாதிய வழக்கறிஞர் யூசுப் முச்சாலா, "நாம் அனைவரும் இந்தியர்கள். நாம் அனைவரும் தேசியவாதிகள். மதங்களை பின்பற்றுபவர்களும் தேசியவாதிகளாக இருந்துள்ளார்கள். இந்திய சுதந்திர போராட்டம் இதைதான் கூறியது." என்று கூறியது. சிறிய தாடி வைப்பது, நீளமான தாடி வைப்பது, தொப்பி அணிவது போன்றவை அவரவர் சுய விருப்பம் சார்ந்தது என்ற நீதிபதி புட்டுசுவாமி தீர்ப்பை சுட்டிக்காட்டினார்.
கேலிசித்திரங்கள் அல்ல
"இந்த இளம் மாணவிகள் என்ன குற்றம் செய்தார்கள். சிறிய துணியை கொண்டு தங்கள் தலையை மறைத்தது தவறா? ஹிஜாப் அணியும் பெண்களை கேலி சித்திரங்களாக பார்க்கக் கூடாது. அவர்களை கண்ணியமாக பார்க்கவேண்டும். அவர்கள் பலமானவர்கள். ஹிஜாபை தங்கள் சக்தியாக பார்க்கிறார்கள். அவர்கள் மீது யாரும் முன் முடிவுகளை வைக்க முடியாது." எனவும் யூசுப் வாதாடினார்.
குர்ஆனை மாற்ற முடியாது
இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர் தார், "1400 ஆண்டுகள் முன்பு அருளப்பட்ட குர்ஆனில் உள்ள சூராக்களில் இடம்பெற்றுள்ள அல்லாஹ்வின் கட்டளை எதுவாக இருந்தாலும் அது கட்டாயமாகும். அவற்றை திருத்தம் செய்ய முடியாது. குர்ஆன் என்பது அல்லாஹ்வின் உத்தரவு. அதை பின்பற்றுவது அவசியம். இஸ்லாமியர்கள் குர்ஆனை பின்பற்றுகிறார்கள். மரணத்துக்கு பின்னர் நியாய தீர்ப்பு நாளில் அது தொடர்பாக கேட்கப்படும். ஹிஜாப் விவகாரம் கவலையை ஏற்படுத்தினாலும், இந்த சிறந்த நாட்டில் அரசியலமைப்பு பாதுகாப்பை அளிக்கிறது. நாங்கள் புர்கா அணிந்து செல்ல அணிந்து செல்ல அனுமதி கேட்கவில்லை. முக்காடு போடவே அனுமதி கோருகிறோம்." என்றார்.
தனியுரிமை
இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "ஹிஜாப் என்பது அவர்களுடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. ஹிஜாப் அவர்களின் அங்கமாகிவிட்டது. அதை அழிக்க முடியாது. கல்லூரி வாயிலில் எனது உரிமை தடுக்கப்பட வேண்டுமா? அரசு தடை விதிக்காமல் பள்ளியால் இதை அணிந்து வரக்கூடாது என்று சொல்ல முடியாது? ஆடை என்பது தனியுரிமையின் இதயம். இந்த உரிமை பொது இடத்தில் மீறப்படுவதற்கு அரசியலமைப்பு சாசனம் அனுமதியளிக்கவில்லை. பன்முகத்தன்மையின் அனைத்து நிலைபாடுகளையும் ஏற்றுள்ளோம். அப்படியென்றால் பொது இடத்தில் யார் வேண்டுமானாலும் ஹிஜாப் அணியலாம். யாரும் பிரச்சனை செய்ய முடியாது." என்றார்.
திலகம் இடலாமா?
இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். "குஜராத், ராஜஸ்தானிகள் அணியும் பாக்டி தலைப்பாகை, நெற்றி திலகம், சிலுவை போன்றவை தடை செய்யப்படவில்லை. ஹிஜாப் பல ஆண்டுகளுக்கும் மேலாக மத அடையாளமாக உள்ளது. ஹிஜாப் மூலமாக மத உரிமைகளை வெளிப்படுத்துகிறார்கள். ஹிஜாபை மதம் வலியுறுத்துகிறதா அல்லது நம்பிக்கையா என்பதை கடந்து பொது ஒழுங்கை கெடுக்காமல் இருக்கும் சூழலில் அதை தடை செய்திட முடியாது." என்றார்.