உச்சநீதிமன்றத்தில் புதியதாக 5 நீதிபதிகள் பதவியேற்பு..யார் யார்? முழு விவரம் இதோ
உச்சநீதிமன்றதில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34. ஆனால் இதுவரை 27 நீதிபதிகள் இருந்த நிலையில், இன்று 5 நீதிபதிகள் புதியதாக பதவியேற்பதன் மூலம் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகளின் காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில், 5 உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 'கொலீஜியம்' பரிந்துரைத்தது. இதனையடுத்து இன்று இந்த 5 நீதிபதிகளும் பதவியேற்றுக்கொண்டனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தை பொறுத்த அளவில் நீதிபதிகளின் நியமனம் கடந்த சில நாட்களாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. நீதிபதிகள் நியமனத்தை 'கொலீஜியம்'தான் தீர்மானிக்கிறது. இதன் தலைவராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருக்கிறார். இதன் உறுப்பினராக உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் இருப்பார்கள். இந்த அமைப்பு புதிய நீதிபதிகள் குறித்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று திருப்பி அனுப்பும்.
இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து இந்த திட்டத்தை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு முயன்றது. இதற்கான ஒரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் பாஜக தாக்கல் செய்தது. இதற்கு பெரும்பான்மையாக ஒப்புதல் இரு அவையிலும் கிடைத்தது. இதன்படி இனி நீதிபதிகளை சக நீதிபதிகளே தேர்ந்தெடுக்கப்படுவது நிறுத்தப்பட்டு, அதற்கு பதில் மற்றொரு குழு அமைக்கப்படும்.
பிரச்சனைக்கு நடுவே.. உச்சநீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள்.. மத்திய அரசு ஒப்புதல்.. என்ன நடந்தது?
எதிர்ப்பு
இது 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்' என்று அழைக்கப்படும். இந்த ஆணையத்தில் மத்திய சட்ட அமைச்சர், நீதிபதிகள் மற்றும் 2 முக்கியஸ்தர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்கள்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வார்கள். ஆனால், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், இது குறித்த வழக்கில் இந்த மசோதா செல்லாது என்று கடந்த 2015ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து மீண்டும் பழய 'கொலீஜியம்' முறையே தொடர்ந்தது. ஆனால் கொலீஜியத்திற்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ சமீப நாட்களாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
கொலீஜியம்
இந்த அமைப்பு முறை கலைக்கப்பட வேண்டும் என்றும், நீதிபதிகளை சக நீதிபதிகளே நியமிப்பதால்தான் நாட்டில் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாவும் விமர்சித்திருந்தார். எனவே இதற்கு மாற்றமாக 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்' அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த சூழலில்தான் உச்சநீதிமன்றத்தில் காலியாக இருக்கும் 7 நீதிபதிகளின் பணியிடத்திற்கு 5 நீதிபதிகளின் பெயரை கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது. கடந்த டிசம்பர் 13ம் தேதி இந்த பரிதுரையை கொலீஜியம் முன்வைத்தது. ஆனால் இது குறித்து மத்திய அரசு பதிலளிக்காமல் மௌனம் காத்து வந்தது.
கேள்வி
இப்படி இருக்கையில் 4 நாட்களுக்கு முன்னர் ஒரு வழக்கு விசாரணையின்போது, "கொலீஜியம் பரிந்துரை என்ன ஆயிற்று?" என அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோர் கேள்வியெழுப்பியிருந்தனர். அதற்கு பதலளித்த அட்டர்னி ஜெனரல், "இன்னும் இரண்டு நாட்களில் மத்திய அரசு முடிவெடுக்கும்" என்று கூறியிருந்தார். இதற்கு நீதிபதிகள் கடும் கண்டம் தெரிவித்தனர். நீதிபதிகள் பரிந்துரை செய்து 2 மாதங்கள் ஆன நிலையில் இதன் மீது இன்னமும் முடிவெடுக்காமல் இருப்பது மோசமான செயல் என்றும், இதனால் விளைவுகள் வேறுமாதிரியாக இருக்கும் என்றும் எச்சரித்தனர்.
பதவியேற்பு
இதனையடுத்து நேற்று முன்தினம்(பிப்.04) கொலீஜியம் பரிந்துரைத்த, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிதல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமனுல்லா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரின் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஒப்புதல் கொடுத்துள்ளார். இவர்கள் ஐவரும் புதிய உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று காலை பதவியேற்றுக்கொள்கின்றனர்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
இதில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான பங்கஜ் மித்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி முதல் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். அடிப்படையில இவர் ஒரு வணிகவியல் பட்டதாரியாவார். பின்னர் மீரட் சட்ட கல்லூரியில் கடந்த 1985ம் ஆண்டு LLB முடித்தார். பின்னர் 2006ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி, 2008ம் ஆண்டு நிரந்தர நீதிபதி, 2021ம் ஆண்டு ஜம்மு யூனியன் பிரதேசத்தின் பொது உயர்நீதிமன்றத்தின் தலைமை என பதவி வகித்து கடைசியாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
இவருக்கு அடுத்து பதவியேற்க உள்ள இரண்டாவது மூத்த நீதிபதி பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல் ஆவார். இவர் அடிப்படையில் வரலாற்று துறை பட்டதாரியாவார். பின்னர் இமாச்சலப்பிரதேசத்தில் சட்டம் பயின்று 1986ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். இவர் அரசியலமைப்பு, வரிவிதிப்பு, பெருநிறுவன, குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராவார். 1986ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கிய இவர், 1998-2003 வரை இமாச்சலப் பிரதேசத்தின் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 2007ம் ஆண்டு நியமனமானார். இதனையடுத்து அதே உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் நியமனமானார். அதன் பின்னர் 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், 2019ம் ஆண்டு முதல் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வருகிறார்.
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
இதனையடுத்து மூன்றாவது சீனியர் நீதிபதி சஞ்சய் குமார் ஆவார். இவரும் அடிப்படையில் வணிகவியல் பட்டதாரியாவார். 1988ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் LLB பயின்று 2000-2003 வரை ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். இதனையடுத்து 2008ம் ஆண்டு அதே நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். பின்னர் 2010ம் ஆண்டு அதே நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவும், 2019ம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் 2021ம் ஆண்டு முதல் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள்
உச்சநீதிமன்றத்திற்கு புதியதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகளில் மூவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாவார். மீதமுள்ள இருவர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாவார்கள். இதில் 4வது சீனியர், நீதிபதி அசானுதீன் அமானுல்லா ஆவார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் 1991ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் பணியை தொடங்கினார். இதனையடுத்து 2021-2022ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஆந்திரப் பிரதேசத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றி வருகிறார். இந்த வரிசையில் 5வது சீனியர், நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆவார். இவர் 1988ம் ஆண்டு வழங்கறிஞராக பணியை தொடங்கினார். பின்னர் 2011ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2013ம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றி வருகிறார்.