'யார்கிட்டையும் சொல்லக் கூடாது..' டெல்லியில் தலித் சிறுமி பாலியல் படுகொலை.. தாயை மிரட்டிய பூசாரி
டெல்லி: தலைநகர் டெல்லியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அச்சிறுமியின் உடல் பெற்றோரின் சம்மதமின்றி எரியூட்டப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த 9 வயது தலித் சிறுமி தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு அந்தச் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
'அனாதையாக நிற்கிறோம், நீதி நிலைநாட்டப்படும் என நம்புகிறோம்..' பென்னிக்ஸ் தாயார் கண்ணீர் பேட்டி
டெல்லி சிறுமி
தலைநகர் டெல்லியின் நங்கல் பகுதியைச் சேர்ந்த 9 வயது தலித் சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கூலரில் இருந்து தண்ணீர் பிடித்து வருவதாகக் கூறி அருகிலுள்ள மயானத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகு நீண்ட நேரம் ஆகியும் அந்தச் சிறுமி வீடு திரும்பவில்லை. இந்தச் சூழலில் மாலை 6 மணியளவில் மயானத்தின் பூசாரி ராதேஷ்யம் அச்சிறுமியின் தாயை அழைத்துள்ளார். மயானத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அச்சிறுமி உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
எரியூட்டினர்
மேலும், பெற்றோரின் முறையான ஒப்புதல் இல்லாமல் அச்சிறுமியின் உடலையும் எரியூட்டியுள்ளார். அப்போது அந்த பூசாரி சிறுமியின் தாயிடம், "இது குறித்து போலீசாரிடம் தெரிவிக்க வேண்டாம். ஏனென்றால், போலீசாருக்கு சொன்னால், அவர்கள் உடகூராய்வு செய்ய வேண்டும் எனச் சிறுமியின் உடலை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். சிறுமியின் உடல் உறுப்புகளைத் திருடிவிடிவார்கள்" எனக் கூறி, அவசர அவசரமாக உடலை எரியூட்டியுள்ளனர்.
பாலியல் வன்புணர்வு
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அச்சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அச்சிறுமியின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அந்த பூசாரி "வீட்டுக்கு போய் தூங்கு. இது பத்தி யார்கிட்டையும் சொல்லாதா. அழுது ஆர்பட்டாம் பண்ணாம இரு" என மிரட்டும் வகையிலும் பேசியதாக அச்சிறுமியின் தயார் தெரிவித்துள்ளார்.
4 பேர் கைது
இது தொடர்பாகப் பூசாரி மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கொலை, போக்சோ சட்டம், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்தச் சிறுமி உயிரிழந்த 3 நாட்கள் கடந்துள்ள நிலையில், சிறுமியின் உடல் எரிக்கப்பட்டதால் அவரது மரணத்திற்கான காரணத்தை அறிய முடியாமல் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பதில் சொல்லவில்லை
இது குறித்து அச்சிறுமியின் தாயார் கூறுகையில், "நான் அங்குச் சென்றபோது அவர் என் மகள் உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். எப்படி உயிரிழந்தாள் என்று கேட்டதற்கு அவர்கள் முறையாகப் பதில் கூறவில்லை. போலீசாருக்கு கால் செய்யச் சொன்ன போதும் மறுத்துவிட்டனர். எனது மகளை அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அதன் பிறகும் எங்கள் கண் முன்னரே வெறும் 2 மணி நேரத்தில் எனது மகளுக்கு எரியூட்டினர்.
டெல்லி போலீசார்
அதன் பிறகு நான் எனது உறவினர்களிடம் சென்று என்ன நடந்தது எனத் தெரிவித்தேன். அவர்கள் சாலை மறியல் நடத்திய பிறகே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்" என்று தெரிவித்தார். இது குறித்து விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்த தென் கிழக்கு டெல்லி துணை காவல் ஆணையர் இங்கித் பிரதாப் சிங், இந்தச் சம்பவத்தில் 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்" என்றார்