30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்
டெல்லி: கோவாவில் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, பாஜக கவுன்சிலர் மகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் விசாரித்ததில், 30 சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பான வழக்கு கோவாவை உலுக்கியிருக்கிறது.
தெற்கு கோவா பாஜக கவுன்சிலர் மகன் சோம் நாயக், 25-30 சிறார் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

என்ன நடந்தது?
குர்சோரம் நகராட்சியின் பாஜக கவுன்சிலரின் 20 வயது மகன் சோம் சுஷாந்த் நாயக், அப்பகுதியில் குறைந்தது 25 முதல் 30 சிறார் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். மடேகல்-ககோராவைச் சேர்ந்த நாயக், கடந்த 3 ஆண்டுகளாக, சிறுமிகளைப் பாலியல் துன்புறுத்தி, அதை வீடியோவாக பதிவு செய்து, அதை வைத்து மிரட்டியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூன்றாண்டு துஷ்பிரயோகம்
இந்த விவகாரம் கடந்த வாரம் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேரான நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களை நடத்தினர். 2 நாட்களில் கைது செய்யப்படாவிட்டால் கடையடைப்பு நடத்தப்படுவதாக பொதுமக்கள் எச்சரித்திருந்தனர். தாமாக முன்வந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு காவல்துறையினரை வலியுறுத்தினர். எதிர்க்கட்சியான காங்கிரஸ், மாநிலத் தலைவர் அமித் பட்கர் மூலம் உடனடி விசாரணைக்கு வலியுறுத்தினார்.
போக்சோ வழக்கு
குர்சோரம் போலீசார் சோம் சுஷாந்த் நாயக் மீது பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 8, 12, மற்றும் 15(2) மற்றும் கோவா குழந்தைகள் நலச் சட்டத்தின் பிரிவு 8(2) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
போலீசார் கூறுவது என்ன?
தெற்கு கோவா காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் தேசாய் இது குறித்து கூறியதாவது: "புதிய ஆதாரங்கள் வெளிவரும்போது கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்படும். தேவைப்பட்டால், கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்படும். சட்டத் தேவையைப் பொறுத்து, தனிப்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்படலாம். ஆதாரங்களைச் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
வழக்கை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு வழக்கு வலுவாக்கப்படும். விசாரணைப்படி, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்து செயல்படுவோம்.
தீவிர விசாரணை
பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதும், அவர்களின் வயது பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்கள் மூலம் சரிபார்க்கப்படும். முழுமையான விசாரணை நடத்தப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் இருப்பதை உறுதி செய்வதோடு, வழக்கை முடிந்தவரை வலுப்படுத்துவோம்" என்றும் சந்தோஷ் தேசாய் விளக்கினார்.
இந்த வழக்கின் முழு வீச்சையும் அறிய, அதிகாரிகள் தற்போது டிஜிட்டல் ஆதாரங்களை பகுப்பாய்வு செய்து வருகின்றனர். மிரட்டிப் பணம் பறிக்கப் பயன்படுத்தப்பட்ட காணொளிகளை மீட்டெடுக்கவும், ஆய்வு செய்யவும் தடயவியல் நிபுணர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications