அட தங்கமே.. விமானம் இயங்காமல் இருந்ததால் இப்படி ஒரு நல்லது நடந்துச்சா.. பாருங்களேன்!
டெல்லி: கொரோனா மற்றும் அதைச் சார்ந்த லாக்டவுனால் பொருளாதாரம் பெரிய பாதிப்பை சந்தித்திருக்கலாம்.. ஆனால், இந்த லாக்டவுன் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தத்தால், தங்க கடத்தல் வெகுவாக குறைந்துள்ளதாம்.
தங்கத்தை வாங்குவதில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியாதான். கடந்த ஆண்டு, 120 டன் அளவுக்கு கடத்தல் தங்கம் நமது நாட்டுக்குள் வந்துள்ளது.
நாட்டின் வருடாந்திர தேவையில் சுமார் 17 சதவீதம் இப்படியான கடத்தல் தங்கத்தின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது.

கடத்தல்
இப்போது நிலைமை வேறு. இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக தங்கம் வருவது மாதத்திற்கு சுமார் 2 டன் வரை குறைந்துவிட்டது. மேலும் இந்த ஆண்டு சுமார் 25 டன் அளவுக்கு கடத்தல் தங்கம் வந்து இருக்கலாம் என்று அகில இந்திய நகை உள்நாட்டு கவுன்சிலின் தலைவர் அனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

விமான போக்குவரத்து
உலகின் வேறு எந்த நாட்டைவிடவும், கடுமையான லாக்டவுனை இந்தியா கடைபிடித்தது. மார்ச் மாதத்தில் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜூன் முதல் மூன்று மாதங்களில் பொருளாதாரம் கிட்டத்தட்ட கால் பங்காக சுருங்கிவிட்டது. இது பாதிப்பு என்ற போதிலும், கடத்தல் தங்கத்தின் அளவு குறைந்துள்ளது மட்டும் கொஞ்சம் நல்ல விஷயம்தான்.

கடத்தல் குறைவு
தங்கத்தின் ஒட்டுமொத்த தேவை லாக்டவுன் காலகட்டத்தில் குறைத்தது. கட்டுப்பாடுகள் மெதுவாக தளர்த்தப்பட்டுள்ளபோதிலும், இன்னும் எல்லைகளை முழுமையாகத் திறக்கவில்லை. "கடந்த ஆறு மாதங்களில் விமானங்கள் எதுவும் இல்லை, எனவே கடத்தல் மிகக் குறைவாக உள்ளது" என்று பத்மநாபன் மேலும் தெரிவித்தார்.

தரை மார்க்கம்
நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கையியிலிருந்து இப்போதும், தரை மார்க்கமாக தங்கம் கடத்தப்படுகிறது. ஆனால், விமானங்கள் வழியாகத்தான் கடத்தல் அதிகம் நடக்கும். இப்போது விமானங்களும் இல்லை, கடத்தலும் இல்லை என்கிறார் அவர்.

இறக்குமதி வரி
தங்கத்தின் மீதான அதிக விலை மற்றும் தங்கத்தின் மீது இந்திய அரசு 12.5 சதவீத இறக்குமதி வரி விதிப்பது கடத்தலை அதிகரித்துள்ளது. கடத்தலை குறைக்க, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியில் 50 சதவீதத்தையாவது குறைக்க வேண்டும் என்று நகைக்கடை அமைப்புகள் அரசை கேட்டுக் கொண்டு வருகின்றன. ஆனால் இதுவரை வரி குரைந்தபாடில்லை.

இலங்கை கடத்தல்
விமானங்கள் மீண்டும் இயங்க தொடங்கும் போது, கடத்தல் மீண்டும் அதிகரிக்கக் கூடும். இந்த மாதத்தில் இலங்கை தங்கத்திற்கான இறக்குமதி வரியை நீக்குகிறது. இதுவும் இந்தியாவுக்கு தங்க கடத்தலை அதிகரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று பத்மநாபன் தெரிவிக்கிறார். "இலங்கையிலிருந்து 45 நிமிட படகு சவாரி மூலம் இந்தியாவின் தென்பகுதியை தொட்டுவிடலாம். எனவே இலங்கையிலிருந்து கடத்தல் இனி அதிகரிக்கும்" என்கிறார் அவர்.












Click it and Unblock the Notifications