தெருவில் கத்தும் அரசியல்வாதிபோல்.. ஆளுநருக்கு ஆங்கில சேனலில் பிடிஆர் அட்வைஸ் - பாஜக மீதும் புகார்
டெல்லி: நாட்டின் 2 வது பெரிய பொருளாதார மாநிலமான தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்துகொண்டு வீதியில் கத்தும் அரசியல்வாதியைபோல் ஆளுநர் பேசக்கூடாது எனதமிழ்நாடு நிதியமச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
தனியார் ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டி.வி நேர்காணலில் பேசிய அவர், "பொருளாதார அடிப்படையில் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறுகிறது என்பதையும், இதை சமூக நீதிக்கு எதிரானதாகவும் தமிழ்நாடு அரசு பார்க்கிறது.
இது ஒரு தனிநபரின் கருத்து கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி. ஆளுநர் விவகாரத்தை எடுத்துக்கொண்டால், இது திமுக மற்றும் திமுக எம்பிக்களின் கருத்து மட்டுமல்ல. இது கூட்டணி கட்சிகளின் கருத்து.

குடியரசுத் தலைவரிடம் விளக்கம்
ஆட்சியில் இருக்கும் எங்களின் கடமைகளை நிறைவேற்ற தமிழ்நாடு ஆளுநர் இடையூறாக இருக்கிறார் என்பதை குடியரசுத் தலைவரிடம் விளக்கம் அளித்தோம். தமிழ்நாடு சட்டசபையில் நடைபெறும் விவாதங்களில் இதற்கு முன்பாக ஆளுநர் பற்றி வரம்பு மீறும் வகையிலும், கண்ணியம் குறைவாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.

கருணாநிதி கொண்டு வந்த தீர்மானம்
எனவே கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஆளுநர் குறித்து மரியாதை குறைவான விதாங்களை சட்டசபையில் மேற்கொள்ளக்கூடாது எனவும் ஆளுநருக்கு மரியாதை வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டு வந்தார். ஒரு அமைச்சர் என்ற முறையில் உண்மையான செய்திகளை நான் இங்கு பதிவு செய்திட விரும்புகிறேன்.

மசோதாக்கள்
அதை தவிர்த்து ஆளுநர் பற்றி சந்தேகங்களையும் குற்றச்சாட்டுக்களையும் நான் முன்வைக்க விரும்பவில்லை. நாங்கள் நிறைவேற்றிய பல மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்கவில்லை. டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. எனவே இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மிகத்தெளிவான செயல்.

அரசியலமைப்பு
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாமல், குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநரின் தனிப்பட்ட பார்வையால் மறு ஆய்வு செய்வதற்கு உரிமை வழங்குவது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களின் எண்ணத்தில் நிச்சயம் இல்லை.

அதிகாரம் இல்லை
சட்டசபையில் சில விவகாரங்களில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கூட தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டு உள்ளார். ஆளுநருக்கு இந்த அதிகாரம் இல்லை என்று நிச்சயமாக சொல்ல முடியும். எந்த ஜனநாயக நாட்டிலும் மக்கள் தேர்வு செய்யாத ஒருவரால் இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடியாது.

கண்ணியமாக இருக்க வேண்டும்
ஆளுநராக இருப்பவர்கள் கண்ணியத்தோடும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். அதை விடுத்து அரசியலமைப்பு சட்டத்தை தாண்டிய விவகாரங்களில் ஆளுநர்கள் தங்கள் நிலைபாட்டை பதிவு செய்திடவும், சமூகம் நடத்தப்பட வேண்டிய விதம் குறித்தும் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க கூடாது.

வீதியில் கத்தும் அரசியல்வாதிபோல்..
வீதியில் சத்தம்போடும் அரசியல்வாதியை போன்று, நாட்டின் 2 வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு பேசுவது கூடாது. இதுபோன்ற செயல் இப்பதவிக்கு ஒருவர் தகுதியற்றவராகி வருவதை காட்டுகிறது. அவர் சமூக அக்கறையை காட்டும் வகையில் பேசினார் என்பதை எடுத்துக்காட்ட ஏதாவது இருக்கிறதா?

பாஜக ஆளாத மாநிலங்கள்
ஆளுநருக்கும் அரசுகளுக்கு மோதல் போக்கு நிலவும் கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை. இதில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் மிகக்குறைவு. தெலுங்கானாவில் ஒற்றை இலக்கத்திலேயே அவர்களால் வெற்றிபெற்றிட முடிகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் ஆளுங்கட்சிகள், பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களினால் மோசமான இடையூறுகளை சந்திக்கின்றன." என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications