TNPSC உறுப்பினர்கள் நியமன முறை- உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மீது ஆளுநர் சரமாரி புகார்!
டெல்லி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி- TNPSC உறுப்பினர்கள் நியமன முறையில் வெளிப்படை தன்மை இல்லை என உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்கள், கோப்புகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் தரவில்லை; ஆகையால் ஆளுநர் முடிவெடுக்க கால நிர்ணயம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்தது.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை
- டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்படும் நபர் ஓராண்டுக்கும் குறைவாக மட்டுமே பதவியில் இருப்பார்
- டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர், கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருந்த போது நிர்வாக முறைகேடு புகாரில் பணி நீக்கம் செய்யப்பட்டவர். இது தொடர்பான கோப்பு அக்டோபர் 26-ந் தேதி ஆளுநர் மாளிகைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்த கோப்பு நிலுவையில் உள்ளது.
- லோக் ஆயுக்தா நீதிபதியாக ராஜமாணிக்கம், தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் நியமனம், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் நியமனம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக பழனிகுமார் நியமனம், மாநில தலைமை செயலர் நியமனம், டிஜிபி நியமனம் ஆகிய பரிந்துரைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார்.
- பாரதியார் பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவில் யுஜிசி தலைவரால் முன்மொழியப்பட்டவர் இடம் பெறுதல் அவசியம். ஆகையால் தேடுதல் குழுவை மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு மாற்றி அமைக்கவில்லை. ஆகையால் யுஜிசி முன்மொழிந்தவரை தேடுதல் குழுவில் ஆளுநர் இடம் பெறச் செய்துள்ளார்.
இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications