அந்த 4 வார்த்தைகள்.. ஆளுநர் ரவி தவறாக புரிந்துகொண்டு நடக்கிறார்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற்று இருக்கும் 4 வார்த்தைகளை தவறாக புரிந்துகொண்டு நடப்பதாக தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு உள்ளர்.
தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்கள், முக்கிய முடிவுகள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் தராமல் கால தாமதம் செய்து வருவதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் சட்டவிரோதமானவை என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் கடந்த 6 ஆம் தேதித வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன், முகுல் ரோத்தகி ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
வழக்கறிஞர் வில்சன், "ஆளுநர் ஆர்.என்.ரவி கோப்புகளை கிடப்பில் போட்டு இருப்பதால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 14 இடங்களில் தலைவர் உள்ளிட்ட 10 பதவிகள் காலியாக இருக்கின்றன. மக்களின் பொது சுகாதார திட்டம் தொடங்கி உயர் கல்வி விவகாரம் வரை எந்த விதமான கோப்புகள் மற்றும் மசோதாக்களுக்கும் ஆளுநர் ரவி பதில் அளிக்கவில்லை. பல முறை கோரிக்கை விடுத்த பிறகு ஆளுநர் அந்த கோப்பை கிடப்பில் போட்டு உள்ளார்." என்றார்.
வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவிக்கையில், "அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என நாங்கள் ஆளுநரிடம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி இப்போது வரை, கெஞ்சிக் கொண்டு இருக்கிறோம். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக சில கோப்புகளில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறோம். நன்னடத்தை அடிப்படையில் கைதிகளின் தண்டனையை குறைக்க பரிந்துரைக்கவும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எந்த நடவடிக்கையையும் ஆளுநர் எடுக்கவில்லை" என்றார்.
"சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான ஒப்புதல்கோரும் கோப்பு, டிஎன்பிஎஸ்சி பணி நியமனங்கள், ஊழல் வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் கோப்புகளை கூட ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார். அரசின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் ஆளுநரின் நடவடிக்கைகள் உள்ளன. கூடிய விரைவில் என்று அர்த்தம் தரக்கூடிய (AS SOON AS POSSIBLE) என்ற வாக்கியத்தை ஆளுநர் தவறாக புரிந்துகொண்டு நடந்து வருகிறார்." என்று அவர்கள் வாதிட்டனர்.












Click it and Unblock the Notifications