டிகிரி கூட தேவையில்லை.. ஐஐடியில் படிக்கலாம்.. குருகுலத்தில் பயின்றோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
டெல்லி: முறையான பட்டப்படிப்பு டிகிரி இல்லாவிட்டாலும் பாரம்பரிய குருகுலங்களில் கல்வி பயின்ற மாணவர்களையும் ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபட அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய முன்னெடுப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. 'சேதுபந்த வித்வான் யோஜனா' என்ற இந்த திட்டத்தின் கீழ் குருகுலத்தில் பயின்ற மாணவர்களும் ஐஐடிகளில் படிக்கலாம்.
இப்போது நாம் ஐஐடிகளில் படிக்க வேண்டும் என்றால் முறையாகப் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், ஐஐடிகளுக்கு என இருக்கும் ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வையும் கிளியர் செய்ய வேண்டும். அந்த முறையை மாற்றும் வகையில் "சேதுபந்த வித்வான் யோஜனா" என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு
இதன் மூலம் பாரம்பரிய குருகுலங்களில் கல்வி பயின்ற மாணவர்களும், முறையான பட்டப்படிப்பு டிகிரி இல்லாவிட்டாலும், நாட்டின் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களான ஐஐடிகளில ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடலாம். சேதுபந்த வித்வான் யோஜனா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம், இந்தியாவின் பழமையான அறிவு மரபுகளை நவீன கல்வி ஆராய்ச்சியுடன் இணைக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், குருகுலங்களில் பயின்றவர்கள், ஐஐடி போன்ற நிறுவனங்களில் ஆராய்ச்சி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மாதம்தோறும் ₹65,000 வரை சம்பளமும், ஆண்டுதோறும் ஆராய்ச்சி மானியங்களும் வழங்கப்படும்.
டிகிரி தேவையில்லை
பாரம்பரிய சாஸ்திரங்கள் மற்றும் இந்திய அறிவு அமைப்புகள் பற்றிய ஆழமான அறிவை கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பள்ளி அல்லது கல்லூரி டிகிரி கட்டாயம் இல்லாமல் மத்திய அரசு அறிவிக்கும் முதல் தேசிய அளவிலான முயற்சி இதுவாகும். இத்திட்டத்தில் பங்கேற்க, மாணவர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அங்கீகரிக்கப்பட்ட குருகுலத்தில் பயின்றிருக்க வேண்டும். மேலும், சமஸ்கிருதம், ஆயுர்வேதம், தத்துவம், கணிதம் அல்லது பாரம்பரிய கலைகள் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் திட்டம், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் இந்திய அறிவு அமைப்பு (IKS) பிரிவு மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் இரண்டு வகையான உதவித்தொகை பிரிவுகள் உள்ளன.. முதுகலை மாணவர்களுக்கு மாதத்திற்கு ₹40,000 சம்பளம் மற்றும் ₹1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. முனைவர் பட்ட மாணவர்களுக்கு மாதத்திற்கு ₹65,000 சம்பளம் மற்றும் ₹2 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த துறைகள்
தத்துவம் மற்றும் அறிவாற்றல் அறிவியல் (அன்விக்ஷிகி வித்யா), கணிதம், இயற்பியல், வானியல் (கணித-பூத்-ஜோதிஷ் வித்யா), ஆயுர்வேதம் மற்றும் சுகாதார அறிவியல் (பைஷஜ்ய வித்யா), சமஸ்கிருத இலக்கணம், இசை, அரசியல் கோட்பாடு ஆகியவை ஆராய்ச்சிக்கான துறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இது ஒரு துணிச்சலான நடவடிக்கை. பாரம்பரிய அறிஞர்களைக் கல்வி அமைப்பில் கொண்டு வரும் முயற்சி இது. வழக்கமான டிகிரி இல்லாதவர்களுக்கும், இது ஒரு சிறந்த வாய்ப்பை தரும் என்பதில் சந்தேகமே இல்லை" என்று தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கையின் ஒரு முயற்சியாகவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்திய அறிவு சார் அமைப்புகளைப் பிரதான கல்வியுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வி என்பது ஒரு முழுமையான, அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை இந்த புதிய முயற்சி பிரதிபலிக்கிறது.












Click it and Unblock the Notifications