சிலிண்டர் வாங்குவோர் கட்டாயம் eKYC செய்யணும்.. கடைசி தேதி எப்போது? மத்திய அமைச்சர் அமைச்சர் பரபர
டெல்லி: உங்கள் வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் வாங்குகிறீர்களா.. அப்போது நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது eKYC.. கேஸ் சிலிண்டர்கள் நிறுவனங்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இதனால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகக் கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இதற்கிடையே இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கமளித்துள்ளார்.
வெளிநாடுகளில் கேஸ் என்பது தண்ணீரைப் போலக் குழாய் அமைக்கப்பட்டு நேரடியாக வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும். ஆனால், நமது நாட்டில் கேஸ் வினியோகம் என்பது சிலிண்டர்கள் மூலமாகவே நடக்கிறது.

கேஸ் சிலிண்டர்கள்: அதிலும் வீட்டுப் பயன்பாட்டிற்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கிறது. கடைகள் வைத்திருப்போருக்குத் தனியாக வணிக பயன்பாடு சிலிண்டர்கள் உள்ளன. இருப்பினும், கடைகளில் வீட்டுப் பயன்பாடு சிலிண்டர்களை பயன்படுத்துவது தொடர்கதையாகவே இருக்கிறது. இதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கேஸ் சிலிண்டர்களை வாங்குவோர் eKYC செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சில முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதாவது கேஸ் சிலிண்டர்களை வைத்திருப்போர் eKYC செய்ய எந்தவொரு காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
சிரமம்: கேரளாவின் மூத்த காங்கிரஸ் தலைவரும் அம்மாநில எதிர்க்கட்சி தலைவருமான வி.டி.சதீசன் இது தொடர்பாக ஹர்தீப் சிங் பூரிக்கு கடிதம் எழுதி இருந்தார். கேஸ் சிலிண்டர்களை வைத்திருப்போர் eKYC செய்ய வேண்டியது அவசியம் தான் என்றாலும், அந்தந்த எரிவாயு ஏஜென்சிகளில் சென்று மக்கள் செய்ய வேண்டும் என்பது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக சதீசன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்திற்குத் தான் ஹர்தீப் சிங் பூரி விளக்கமளித்துள்ளார். போலிக் கணக்குகளைக் கண்டறிந்து அகற்றவும், வீட்டுப் பயன்பாடு சிலிண்டர்களை மோசடியான முறையில் கடைகளுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் ஆதார் மூலம் eKYC மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
விளக்கம்: அதேநேரம் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இந்த செயல்முறை நடந்து வருவதாகவும் பொதுமக்கள் மட்டுமே வீட்டுப் பயன்பாடு சிலிண்டர்களை பெறுவதை உறுதி செய்தே இதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்த செயல்முறை எளிமையானது. எல்பிஜி சிலிண்டர்களை வாடிக்கையாளருக்கு வழங்கும்போது, டெலிவரி ஊழியர்களே சான்றுகளைச் சரிபார்க்கிறார்கள்.
எப்படி செய்யணும்: டெலிவரி செய்யும் ஊழியர்கள் தங்கள் மொபைல் செயலி மூலம் வாடிக்கையாளரின் ஆதார் சான்றுகளைச் சரிபார்க்கிறார்கள். இந்த விவரங்களை டெலிவரி ஊழியர்கள் பதிவிடும் போது வாடிக்கையாளருக்கு ஓடிபி செல்லும். அதை டெலிவரி ஊழியர் தனது செயலியில் பதிவிட்டால் போதும். இந்த eKYC பிராசஸ் முடிந்துவிடும். வாடிக்கையாளர்கள் தேவைப்பட்டால் தங்கள் வசதிக்கேற்ப தங்கள் டீலர் அலுவலகத்திற்கும் செல்லலாம்.
அல்லது வாடிக்கையாளர்களே OMC செயலியை டவுன்லோடு செய்து தாங்களாகவே eKYCஐ செய்யலாம். அதேநேரம் இந்த செயல்முறையைச் செய்ய மத்திய அரசு எந்தவொரு காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை.. இதைச் செய்ய நிச்சயம் கேஸ் ஏஜென்சி ஆபீசுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது பொதுமக்கள் எந்தவொரு சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்யும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications