பஜ்ரங் தள் திடீர் போராட்டம்- டெல்லியை நோக்கி நகருது ஹரியானா வன்முறை? உஷார் நிலையில் போலீஸ்!
டெல்லி: ஹரியானா மாநில வன்முறை ஓயாத நிலையில் டெல்லியில் இன்று திடீரென பஜ்ரங் தள் இயக்கத்தினர் திடீரென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹரியானாவை தொடர்ந்து டெல்லியில் வன்முறை பரவாமல் இருக்க போலீசார் முழு உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் நூ மாவட்டத்தில் வி.ஹெச்.பி. இயக்கத்தினர் நடத்திய பேரணி வன்முறையாக உருமாறியது. பஜ்ரங் தள் நிர்வாகியும் பசு பாதுகாவலருமான மோனு மானேசர், இந்த பேரணியில் பங்கேற்பதாக பரவிய தகவல்தான் வன்முறைகளுக்கு அடிப்படையாக அமைந்தது. இஸ்லாமியர்கள் படுகொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படுகிற நபர் மோனு மானேசர். ஆகையால் இந்த வன்முறை வெடித்தது.

ஹரியானா மாநில வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். ஹரியானாவின் நூ மாவட்டத்தைத் தொடர்ந்து டெல்லி அருகே உள்ள குருகிராமிலும் வன்முறை வெடித்தது. இதுவரை இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானாவில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
டெல்லி புறநகரான நொய்டாவில் இன்று இந்துத்துவா இயக்கங்களாஹ வி.ஹெச்.பி. , பஜ்ரங் தள் இணைந்து பிரம்மாண்ட போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்துள்ளன. இதற்கு முன்னதாகவே டெல்லி நகரில் இன்று திடீரென பஜ்ரங் தள் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் தலைநகர் டெல்லியிலும் வன்முறை அபாயம் சூழ்ந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். புறநகர்களை தொடர்ந்து டெல்லிக்குள் வன்முறை சம்பவங்கள் நிகழாத வகையில் போலீசார் முழு உஷார் நிலையில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தில் இரு இனக்குழுக்களிடையேயான மோதல் 3 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த மோதலை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. மணிப்பூர் வன்முறைகளை மாநில அரசு கட்டுப்படுத்தாமல் செயலிழந்துவிட்டதா? மணிப்பூர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லையா? என உச்சநீதிமன்றம் காட்டமான கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் ஹரியானா வன்முறை வெடித்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.













Click it and Unblock the Notifications