அண்ணாமலைக்கு எதிரான நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு- சுப்ரீம் கோர்ட்டில் பிப்.26-ல் க்ளைமாக்ஸ்!
டெல்லி: அவதூறு வழக்கில் தமக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 26, திங்கள்கிழமை) விசாரணை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் "பேசு தமிழா பேசு" என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளிதிருந்தார். அந்த யூடியூப் சேனல் பேட்டியில் இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கத்துடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டிருந்தார்.

பியூஸ் மனுஷ் வழக்கு: இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான் அதகவலை பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.
அண்ணாமலை மனு: இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அண்ணாமலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பட்ட போதும், அதனால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
டிஸ்மிஸ் செய்த ஆனந்த் வெங்கடேஷ்: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்ய மறுத்து அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அப்போது, அண்ணாமலையின் பேச்சு குறித்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெடிகுண்டுகளுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை சேலம் கீழமை நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் உத்தரவிட்டார். இது அண்ணாமலைக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: இதனைத் தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு எதிராக அதாவது தமக்கு எதிரான அவதூறு வழக்கை சேலம் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை வழக்கறிஞர் எம்.ஏ. சின்னசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் பிப்.26-ல் விசாரணை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நாளை மறுநாள் திங்கள்கிழமையன்று விசாரிக்க இருக்கிறது. அன்றைய தினம், அண்ணாமலைக்கு எதிரான நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா? அல்லது அண்ணாமலை மீதான வழக்கை சேலம் கீழ்நீதிமன்றம் தொடர்ந்து நடத்த உத்தரவிடுமா? என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications