உ.பி. ஷாக்.. 2 நாள்ல மீடியா போயிரும்.. வாக்குமூலத்தை மாற்றுங்கள்! பெண்ணின் தந்தையை மிரட்டிய கலெக்டர்
டெல்லி: மீடியாக்காரர்கள் இன்னும் இரண்டு நாட்களில் போய்விடுவார்கள்.. அதற்கு பிறகு நாங்கள் தான் உங்க கூட இருக்க வேண்டியிருக்கும். எனவே வாக்குமூலத்தை மாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது.. என்று பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம் பெண்ணின் தந்தையிடம் மாவட்ட கலெக்டர் பேசும் உரையாடல் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான, பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மரணம் அடைந்தார்.
ஆனால் அவரது உடலை பெற்றோரிடம் கொடுக்காமல் காவல்துறையினரே தகனம் செய்தனர்.
"அப்பா சம்மதத்துடன் தலித் பெண் உடலை எரித்தனர்".. அவசரம் அவசரமாக வீடியோ வெளியிட்ட பாஜக..!
ஏற்காத போலீஸ்
பெண்ணின் குடும்பத்தார் எவ்வளவோ கெஞ்சியும் போலீசார் அவர்களை இறுதிச்சடங்கு செய்ய விடாமல், அதிகாலையிலேயே உடலை எரித்து விட்டனர். ஒரு பக்கம் பலாத்கார சம்பவம் மற்றொரு பக்கம் அவசர அவசரமாக உடலை எரித்தது, என்று உத்தரப் பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசுக்கு, நாடு முழுக்க இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்றபோது காவல்துறை அவர்களுக்கு அனுமதிக்க மறுத்து கைது செய்து டெல்லிக்கு திருப்பி அனுப்பிவிட்டது. அப்போது ராகுல்காந்தி போலீசாரால் தள்ளிவிடப்பட்டார்.
|
கலெக்டர் மிரட்டல்
இந்த நிலையில் ஹத்ராஸ் மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் லக்ஸ்கார், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை நேரில் சந்தித்து மறைமுகமாக அவரை மிரட்டுவது போன்ற ஒரு காட்சி செல்போனில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. "இங்கு வந்திருக்கும் மீடியாக்காரர்கள் இன்னும் ஒரு நாளிலோ அல்லது இரண்டாவது நாளிலோ கிளம்பி சென்று விடுவார்கள். நீங்களும் நாங்களும் மட்டும் தான் இங்கு எஞ்சியிருப்போம். எனவே உங்களது வாக்குமூலத்தை மாற்றிக் கொள்வதும் விடுவதும் உங்கள் விருப்பம். நாம் மாற்றிக் கொள்ள முடியும்" இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசுவது போல் அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது.
அண்ணி
இதனிடையே மற்றொரு வீடியோ காட்சியும் வைரலாக பரவி வருகிறது. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணி அழுதபடியே இவ்வாறு பேட்டியளிக்கிறார்: அரசு தரப்பு எங்கள் மீது அழுத்தத்தைக் கொடுக்கிறது. கொரானா வைரஸ் பாதிப்பால், உயிரிழந்ததாக கூறினால் நிவாரண உதவித்தொகை கிடைக்கும். அதை விடுத்து பலாத்காரம் என்று கூறாதீர்கள் என்று சிலர் கூறுகிறார்கள். எனது மாமனாருக்கு மிரட்டல்கள் வருகின்றன என்று தெரிவிக்கிறார். இவ்விரு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.