எச்சரிக்கை... வரும் நாட்களில் இந்த 2 தென் மாநிலங்களில் அனல் காற்று.. தமிழகத்தில் என்ன பாதிப்பு?
டெல்லி: ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா என இரண்டு மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்தியாவின் பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே, நாட்டின் பல மாநிலங்களின் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த நாட்களில் வெப்ப நிலை வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஏப்ரல் 3ஆம் தேதி வரை தெலங்கானா மாநிலம் முழுவதும் வெப்ப அலை வீசும் என்று ஹைதராபாத் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பம் சதத்தைக் கடந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எனக்கு "கர்நாடக முகம்" இருக்கு காட்டவா.. தூக்கி போட்டு மிதிச்சுருவேன்.. அண்ணாமலை வார்னிங்..!
அதேபோல ஆந்திரா மாநிலம் முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா முழுவதும் அனல் காற்றும் வெப்ப அலையும் வீசும் என்பதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அம்மாநில அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் அனல் காற்று வீசும் என்பதால் தமிழகத்தில் ஆந்திராவை ஒட்டியுள்ள வட மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.