கனமழை..சென்னையில் 200 வார்டுகளில் காய்ச்சல் முகாம்..என்னென்ன சிகிச்சை..அமைச்சர் மா.சுப்ரமணியன்
சென்னை: கன மழை காரணமாக சென்னை முழுவதும் நாளை 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மருத்துவமுகாமில் காய்ச்சல், சளி, இருமலுக்கு சிகிச்சை மற்றும் மாத்திரை வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு வெள்ள தடுப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழை பாதிப்புக்குள்ளான இடங்களில் ஆய்வு செய்து வருகிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர் முழுவதும் மழைக்கால சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் இந்த மருத்துவ முகாமை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

லிம்கா சாதனை புத்தகம்
கடந்த முறை 155 இடங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தற்போது நடத்தப்பட உள்ள மருத்துவ முகாம்களின் போது மழைக்கால நோய்களில் இருந்து மக்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

200 வார்டுகளில் மெகா மருத்துவ முகாம்
இதுதொடர்பாக மா.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, வருகிற நவம்பர் 5ஆம் தேதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

கே.என். நேரு
இவற்றுள் விருகம்பாக்கம் சட்டசபைத் தொகுதி கலைஞர் நகரில் உள்ள ராணி அண்ணாநகர் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் .கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார். மேலும், அந்தந்த பகுதிகளில் நடைபெறும் அனைத்து மருத்துவ முகாம்களையும் அதற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.

எங்கெங்கு எத்தனை முகாம்கள்
மண்டலம் 1-ல் 14 மருத்துவ முகாம்களும், மண்டலம் 2-ல் 8 மருத்துவ முகாம்கள், மண்டலம் 3-ல் 11 மருத்துவ முகாம்கள், மண்டலம் 4-ல் 15 மருத்துவ முகாம்கள், மண்டலம் 5-ல் 15 மருத்துவ முகாம்கள், மண்டலம் 6-ல் 15 மருத்துவ முகாம்கள், மண்டலம் 7-ல் 15 மருத்துவ முகாம்கள், மண்டலம் 8-ல் 15 மருத்துவ முகாம்கள், மண்டலம் 9-ல் 18 மருத்துவ முகாம்கள், மண்டலம் 10-ல் 16 மருத்துவ முகாம்கள், மண்டலம் 11-ல் 13 மருத்துவ முகாம்கள், மண்டலம் 12-ல் 12 மருத்துவ முகாம்கள், மண்டலம் 13-ல் 13 மருத்துவ முகாம்கள், மண்டலம் 14-ல் 11 மருத்துவ முகாம்கள், மண்டலம் 15-ல் 9 மருத்துவ முகாம்கள், என ஆக மொத்தம் 200 இடங்களில் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

மழைக்கால நோய்கள்
வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வரும் காரணத்தினால் பருவமழைக்கால நோய்களான டெங்கு, ப்ளு என்கின்ற இன்புளுயன்சா, காலரா, டைபாய்டு, சேற்றுப்புண் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படாமல் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் - பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து 200 வார்டுகளில் 200 மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நடத்த உள்ளது.

நோய்களுக்கு சிகிச்சை
இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு முதலிய மழைக்கால தொற்று நோய்களுக்கு தேவையான தகுந்த சிகிச்சைகள் வழங்கப்படும். பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்டு நிலவேம்பு குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் வழங்கப்படும். இந்த மருத்துவ முகாம்களில் காய்ச்சல் மற்றும் இதர உபாதைகள் கண்டறியப்படுவர்கள் மேல்சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க அறிவுறுத்தப்படுவார்கள். 200 வார்டுகளில் நடைபெறும் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications