'லைட்ஸ் ஆஃப்' தரம்சாலா மைதானத்தில் இருந்து 20 ஆயிரம் ரசிகர்களை பதற்றமின்றி வெளியேற்றியது எப்படி?
டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் காரணமாக பஞ்சாப் - டெல்லி இடையிலான போட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டியை காண்பதற்கு மைதானத்தில் 20 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்த சூழலில், அவர்களுக்கு எந்த தகவலும் சொல்லப்படாமலேயே, பாதுகாப்பு அதிகாரிகள் எளிதாக அவர்களை வெளியேற்றி இருக்கின்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவம் திடீரென டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது. இதனை இந்திய பாதுகாப்பு படை எளிதாக முறியடித்தனர். இருந்தாலும் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் காரணமாக தரம்சாலாவில் நடந்து வந்த பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

இதன்பின் வீரர்கள் ஓய்வறைக்கு திரும்பிய நிலையில், ரசிகர்களும் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனிடையே தரம்சாலா மைதானத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் ரசிகர்கள் எப்படி கொஞ்சம் கூட பதற்றமின்றி வெளியேறினர் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக தரம்சாலா மைதானத்தில் போட்டியை நேரில் பார்த்த ரசிகர் ஒருவர் பேசுகையில், தரம்சாலா மைதானத்தில் 10.1 ஓவர்கள் வரை பஞ்சாப் அணி பேட்டிங் ஆடியது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் களத்திற்கு வந்த போது, திடீரென வடகிழக்கில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் அணைந்தன. அதன்பின் உடனடியாக வீரர்களும் அனைவரும் ஓய்வறைக்கு சென்றனர்.
அதன்பின் மற்றொரு மின் விளக்குகளும் அணைந்தது. இதன்பின் மின் விளக்குகள் அணைந்ததால் போட்டி தொடங்குவதற்கு தாமதமான நிலையில், உடனடியாக ரசிகர்கள் அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரையும் விரைவில் வெளியேறுமாறு அறிவுறுத்தினர். அப்போது எங்களுக்கு போட்டி ரத்து செய்யப்பட்டதாக கூட சொல்லவில்லை.
தொடர்ந்து வெளியில் வந்து பார்த்த போது மைதானத்தை சுற்றில் மின்சாரம் தடை செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது. ஆனால் வீதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் மொபைலை எடுத்து பார்த்த போதுதான், அனைத்து விஷயங்களும் தெரிய வந்தன. இரவு 10.30 மணியளவில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக தரம்சாலா மைதானத்தில் மின் விளக்குகள் எரியாததால் ஆட்டம் ரத்து என்று சொல்லப்பட்டது ரசிகர்கள் பதற்றமடைய கூடாது என்பதற்காக தான் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடையே பதற்றம் ஏற்படாமால் தடுக்கவும், சுமூகமாக வெளியேறவும் இந்த நடவடிக்கை கடைபிடிக்கப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications