2024 மக்களவை தேர்தல்.. மோடிக்கு சவால் கொடுக்கும் ஒரே தலைவர் இவர் தான்.. புதிய சர்வே முடிவுகள்
டெல்லி: அடுத்த மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தாலும் கூட இப்போதே அதற்கான பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன.
கடந்த 2014இல் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த பாஜக, மிகவும் வலிமையாக இருந்து வருகிறது. அதன் பின்னர் நடந்த தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வென்று வருகிறது.
குறிப்பாகக் காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலங்களிலும் கூட பாஜக நேரடியாகவோ அல்லது கூட்டணி மூலமோ ஆட்சியைப் பிடித்து வருகிறது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்..!
பாஜக
இதற்குக் கர்நாடகா, மத்தியப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களை நாம் உதாரணமாகக் கூறலாம். சமீபத்தில் கூட மகாராஷ்டிராவில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசை முறித்த சிவசேனா எம்எல்ஏக்கள், பாஜக ஆதரவுடன் ஆட்சியை அமைத்தனர். இதன் மூலம் இரு ஆண்டுகள் நீட்டித்த மகா விளாஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது.
எதிர்க்கட்சிகள்
அடுத்த மக்களவை தேர்தல் 2024இல் தான் என்றாலும் கூட, இப்போதே தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. மக்களவை தேர்தலுக்கு முன்பு பல்வேறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதிலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் முனைப்பாக உள்ளன.
பிரதமர் வேட்பாளர்
மேலும், 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வலுவான தலைவரைப் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் தீவிரமாக உள்ளனர். இதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எனப் பலரது பெயர்களும் அடிபடுகின்றன.
சர்வே
நரேந்திர மோடிக்கு எதிராகக் களமிறங்கும் வேட்பாளர் தேசிய அளவில் நன்கு தெரிந்த நபராகவும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்காத நபராக இருக்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகளின் எண்ணம். இந்தச் சூழலில், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் குறித்து சி-வோட்டர்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் கருத்துக்கணிப்பை நடத்தி இருந்தது. அதாவது பிரதமர் மோடிக்கு வரும் 2024 தேர்தலில் யார் சவாலாக இருப்பார் என்று கேட்கப்பட்டு இருந்து.
அரவிந்த் கெஜ்ரிவால்
அதில் மோடிக்கு கெஜ்ரிவால், நிதிஷ் குமார் இருவரில் யார் சவாலாக இருப்பார் என்று கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் கெஜ்ரிவாலே மோடிக்கு சவாலாக இருப்பார் என்று கூறி உள்ளனர். கெஜ்ரிவால் தான் மோடிக்கு கடும் சவாலாக இருப்பார் என 65% பேரும் நிதிஷ் குமார் சவாலாக இருப்பார் என 35% பேரும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவித்து உள்ளனர்.
எதிர்க்கட்சிகள்
ஆம் ஆத்மி ஏற்கனவே டெல்லிக்கு வெளியே பஞ்சாபிலும் வெற்றிக்கொடி ஏற்றிவிட்டது. இப்போது அடுத்த டார்கெட்டாக பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே களமிறங்குகிறது. மறுபுறம் மூத்த தலைவரான நிதிஷ்குமார், சமீபத்தில் தான் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தார். சமீபத்தில் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்த நிதிஷ்குமார், பாஜகவுக்கு எதிராகக் கூட்டணியை அமைப்பதில் தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.