55 மணி நேரமல்ல.. 5 ஆண்டுகள் விசாரணை நடத்தினாலும் அஞ்சப்போவதில்லை.. நெஞ்சை நிமிர்த்தும் ராகுல் காந்தி!
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக 5 ஆண்டுகள் விசாரித்தாலும், நான் அஞ்சப் போவதில்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ' பாதயாத்திரையை வரும் செப்.7ம் தேதி தொடங்க உள்ளார். அதற்கு முன்னதாக நாட்டில் நிலவி வரும் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக இன்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முக்கியமாக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

ராகுல் காந்தி பேச்சு
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசுகையில், பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் வெறுப்பும் கோபமும் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் குறித்த அச்சம், வேலைவாய்ப்பின்மை காரணமாக வெறுப்பு அதிகரித்து வருகிறது, வெறுப்பு நாட்டை பலவீனப்படுத்துகிறது. மக்களின் இன்னல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப நினைத்தாலும் அதை பாஜக அரசு அனுமதிப்பதில்லை என்று தெரிவித்தார்.

அச்சமில்லை
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக என்னிடம் 55 நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஏன் ஐந்து மாதங்கள் அல்லது ஐந்து வருங்கள் கூட எடுத்துக் கொள்ளுங்கள். நான் இதற்கு அஞ்சப் போவதில்லை. பிரதமர் நரேந்திர மோடியை பொறுத்தவரை நாட்டை பிளவுபடுத்தி, அதில் வரும் லாபங்களை தொழிலதிபர்களுக்கு வழங்க வேண்டும். அதுதான் அவரின் கொள்கை.

காங்கிரஸ் கட்சி
நரேந்திர மோடியும் பாஜகவும் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள். காங்கிரஸ் கட்சி நாட்டை ஒன்றிணைக்கிறது. நாம் வெறுப்பை வேரறுப்போம். வெறுப்பை வேரறுக்கும் போது நாடு வேகமாக முன்னேற்றம் அடைகிறது. இதை காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும் என்பதை தொண்டர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். காங்கிரஸ் சித்தாந்தத்தால் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

எதிர்க்கட்சிகள்
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், எல்லைப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் பேச முயற்சிக்கும் போது தடுக்கப்படுகிறோம். ஊடகங்கள், நீதித்துறை, தேர்தல் ஆணையம் என நிர்வாகங்களும் அழுத்தத்தில் உள்ளன. அதனால் தான் இனி நேரடியாக மக்களை சந்திக்க போகிறோம். பாஜகவையும், அதன் சித்தாந்தத்தையும் வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications