நாட்டு மக்களுக்காகவே வாழ்கிறேன்.. 3வது முறையாக ஆட்சியை கேட்பது ஏன்? பிரதமர் மோடி ஓபன் டாக்
டெல்லி: பதவியை அனுபவிப்பதற்காக நான் மூன்றாவது முறையாக ஆட்சியை கேட்கவில்லை. நான் எனது வீட்டை பற்றி நினைத்து இருந்தால், கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு நான் வீடு கட்டியிருக்க மாட்டேன் என்று டெல்லியில் நடந்த பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுப்பதற்காக பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் நடைபெற்றது. டெல்லியில் உள்ள பாரத் மண்டத்தில் நடைபெற்ற பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பாஜக நிர்வாகிகள் வந்துள்ளனர். இந்தக் கூட்டத்தின் நிறைவு நாளான இன்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

அடுத்த 100 நாட்களில் ஒவ்வொரு புதிய வாக்காளரையும், பயனாளிகளையும் அனைத்து சமூகத்தினரையும் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிஐ 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வைக்க வேண்டும். பாஜக மட்டும் 370 இடங்களுக்கும் மேல் வெல்ல வேண்டும்.
பதவியை அனுபவிப்பதற்காக கேட்கவில்லை: பல தசாப்தங்களாக முடிக்காமல் இருந்த பணிகளை நாம் முடித்து காட்டியிருக்கிறோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதன் மூலம் 5 நூற்றாண்டுகள் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறோம். பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை கிடைப்பதை உறுதி செய்து இருக்கிறோம்.
செங்கோட்டையில் கழிவறை விவகாரத்தை கையில் எடுத்து பேசிய முதல் பிரதமர் நான் தான். பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதில் நான் பெருமை அடைகிறேன். பதவியை அனுபவிப்பதற்காக நான் மூன்றாவது முறையாக ஆட்சியை கேக்கவில்லை.
18 வயதை எட்டிய இளைஞர்கள்: நான் எனது வீட்டை பற்றி நினைத்து இருந்தால், கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு நான் வீடு கட்டியிருக்க மாட்டேன். ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவே நான் வாழ்கிறேன். நாட்டு மக்களுக்காகவே வாழ்கிறேன். நான் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். 18 வயதை எட்டிய இளைஞர்கள் நாட்டின் 18 வது லோக்சபாவை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.
பிரசாரத்தின் போது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் நாம் சென்றடைய வேண்டும். அனைவரது நம்பிக்கையயும் பெற வேண்டும். அடுத்த 100 நாட்கள் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் பணியாற்ற வேண்டும். நாட்டு மக்களின் கனவுதான் எனது கனவு. மக்களுக்காக பகல், இரவு பாராமல் வேலை செய்து வருகிறோம். நாட்டிற்கு சேவை செய்ய அதிக இடங்களை தேர்தலில் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications