விக்கிப்பீடியாவுக்கு தடை? இந்தியா பிடிக்கலைனா இங்கு வேலை செய்யாதீங்க! ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்
டெல்லி: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு எதிராக தவறான தகவல்களை வெளியிட்ட விக்கிப்பீடியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம், ‛‛இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இந்தியா பிடிக்காவிட்டால் இங்கு வேலை செய்ய வேண்டாம். உங்களின் இணையதளத்தை இந்தியாவில் முடக்கம் செய்ய எங்களால் அரசுக்கு உத்தரவிட முடியும்’’ எனக்கூறி காட்டமாக கூறி நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளது. இதனால் விக்கிப்பீடியா நம் நாட்டில் தடை செய்யப்பட உள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
விக்கிப்பீடியா.. கடந்த 2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட இணையதளம் தொடர்பான நிறுவனமாகும். ஜிம்மி வேல்ஸ், லாரி சாங்கர் ஆகியோர் இந்த நிறுவனத்தை தொடங்கினர். இதன் தலைமை அலுவலகம் என்பது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் செயல்பட்டு வருகிறது.

இந்த விக்கிப்பீடியா நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் விக்கிப்பீடியோ வழங்கி வருகிறது. குறிப்பாக பெரிய பெரிய நிறுவனங்கள், தொழிலதிபர்கள், நடிகைகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலருக்கும் தனித்தனியான பக்கங்களில் தகவல்கள் உள்ளன.
இதனால் நம் நாடு உள்பட உலகம் முழுவதும் விக்கிப்பீடியாவை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த விக்கிப்பீடியா பக்கத்தில் அவ்வப்போது இருக்கும் தகவல்கள் என்பது திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனை திருத்தம் செய்ய சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நம் நாட்டில் மிகவும் பிரபலமாக உள்ள ஏஎன்ஐ எனும் செய்தி நிறுவனம் குறித்த விபரம் 3 முறை தவறாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் என்பது மத்திய அரசின் பிரசார கருவி என்று அவதூறாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் எதிர்க்கட்சி தலைவர்கள் பற்றிய செய்திகளை வெளியிடாமல் மத்திய அரசு, பாஜக தலைவர்களின் செய்திகளை மட்டும் வெளியிடுவதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் விக்கிப்பீடியாவில் இந்த தகவல் இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக ஏஎன்ஐ நிறுவனம் சார்பில் விக்கிப்பீடியாவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், ‛‛விக்கிப்பீடியா இணையதளம் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பற்றி அவதூறு பரப்புகிறது. இதனால் ரூ.2 கோடி நஷ்டஈடு வாங்கி தர வேண்டும்.மேலும் எதிர்காலத்தில் ஏஎன்ஐ நிறுவனம் குறித்து தவறான தகவல்களை விக்கிப்பீடியா வெளியிடுவதை நிறுத்துவதற்கான வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்’’ என கூறப்பட்டு இருந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அப்போது டெல்லி உயர்நீதிமன்றம் ஏஎன்ஐ தொடர்பாக திருத்தியமைக்கப்பட்ட தகவல்களை வெளியிட்டவர்களின் பெயர் விபரங்களை வழங்க விக்கிப்பீடியாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் விக்கிப்பீடியா நிறுவனம் அந்த பெயர்களை வெளியிடவில்லை. இதையடுத்து நேற்று இந்த வழக்கு நீதிபதி நவீன் சாவ்லா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நவீன் சாவ்லா, ‛‛ஏன் நீதிமன்றம் கூறிய தகவல்களை இன்னும் வழங்கவில்லை’’ என்று கேள்வி எழுப்பியது.
அதற்கு விக்கிப்பீடியா சார்பில், ‛‛விக்கிப்பீடியாவுக்கு இந்தியாவில் அலுவலகம் இல்லை. இதனால் கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும்’’ என்ற வாதம் வைக்கப்பட்டு அனுமதி கோரப்பட்டது. அப்போது நீதிபதி நவீன் சாவ்லா, விக்கிப்பீடியா நிறுவனத்தை கடுமையாக கடிந்து கொண்டார்.
இதுதொடர்பாக நீதிபதி நவீன் சாவ்லா கூறுகையில், ‛‛இந்த வழக்கு என்பது இந்தியாவில் உங்களின் நிறுவனம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பற்றியது அல்ல. இந்திய சட்டங்களுக்கு இணங்கி விக்கிப்பீடியா இந்தியாவில் செயல்பட வேண்டும். இந்தியா பிடிக்கவில்லை என்றால் தயவுசெய்து இங்கு வேலை செய்ய வேண்டாம். அதுமட்டுமின்றி இதுபோன்ற செயல்பாடுகள் தொடரும் பட்சத்தில் விக்கிப்பீடியாவை இந்தியாவில் முடக்கம் செய்யும்படி அரசுக்கு எங்களால் உத்தரவிட முடியும். ஏனென்றால் நீங்கள் இதற்கு முன்பும் இத்தகைய செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளீர்கள்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தொடர்பாக விக்கிப்பீடியோவில் தவறாக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை சரிசெய்ய தவறிய வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி வைக்க நீதிபதி நவீன் சாவ்லா அதிரடியாக உத்தரவிட்டார். அதன்பிறகு இந்த வழக்கை அக்டோபர் மாதத்துக்கு அவர் ஒத்திவைத்தார். இதனால் விக்கிப்பீடியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்தியாவில் விக்கிப்பீடியா தடை செய்யப்பட உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
***












Click it and Unblock the Notifications