12 நாடுகளில் சதமடித்த குரங்கு அம்மை.. இந்தியாவிலும் பரவ வாய்ப்பா? உலக நிலவரம் சொல்வது என்ன?
டெல்லி: 12 நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100யை கடந்துவிட்டது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்நோய் இந்தியாவில் பரவ வாய்ப்பு உள்ளதா? உலக நிலவரம் சொல்வது என்ன? என்பது பற்றி சுகாதார நிபுணர் கூறியுள்ளார்.
Recommended Video
கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை தொற்று பரவ துவங்கியுள்ளது. ஐரோப்பா நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவிலும் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில் மட்டும் 12 நாடுகளுக்கு குரங்கு அம்மை நோய் பரவியுள்ளதால் உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. இதற்கு பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது.
குரங்கு காய்ச்சல்.. கியரை மாற்றிய தமிழக அரசு.. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு!
12 நாடுகளில் பரவல்
அதாவது ஆப்பிரிக்க நாட்டில் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டது. அங்கு மட்டுமே இந்த நோய் பரவி வந்தது. ஆனால் தற்போது இந்த குரங்கு அம்மை ஆப்பிரிக்காவை தாண்டி ஐரோப்பியாவிலும் பரவ துவங்கியுள்ளது. தற்போது வரை ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சதமடித்த பாதிப்பு
இந்த நாடுகளில் தற்போது வரை 100க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உடலில் தடுப்புகள், கொப்புளங்கள், தொடர் காய்ச்சல் உள்ளிட்டவை அறிகுறியாக உள்ளன. இது பெரியம்மை நோய் போன்று ஒத்துள்ளது. பல நாடுகளுக்கு பரவுவதால் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கண்காணிப்பு தீவிரம்
குரங்கு அம்மை நோய் பாதிப்பு குறித்து இந்திய சுகாதாரத்துறை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது. மேலும் கேரளா, மகாராஷ்டிராவை தொடர்ந்து பிற மாநிலங்களும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளன. இதேபோல் தமிழகம் உள்பட பிற மாநிலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பயப்பட தேவையில்லை
இதுபற்றி பராஸ் ஜேகே மருத்துவமனையில் மூத்த இயக்குனரும் டாக்டருமான சந்தீப் பட்நாகர் கூறுகையில், ‛‛உலகம் கொரோனா நோய் பரவலுக்கு மத்தியில் 3ம் ஆண்டில் இயங்கி வருகிறது. தற்போது குரங்கு அம்மை பிற நாடுகளுக்கும் பரவலாம் என சுகாதாரத்துறை அமைச்சகம் கணித்து எச்சரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை பாதிப்பில்லை. இது நல்ல செய்தி. பிற நாடுகளில் படிப்படியாக அதிகரித்து வரும் குரங்கு அம்மையால் பீதி அடைய தேவையில்லை. ஏனெனில் உலக சுகாதார அமைப்பு, ஏற்கனவே நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் இணைந்து தொற்றுநோயை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த வழிகாட்டுதலை வழங்குகிறது. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.