நாட்டையே நடுநடுங்க வைத்த நிதாரி கொடூரம்.. 19 பேர் கொலையில் தூக்கு தண்டனை பெற்ற இருவர் விடுவிப்பு
டெல்லி: நொய்டா அருகே நிதாரி என்ற பகுதியில் 19 சிறுமிகள் மற்றும் பெண்களை கொலை செய்த வழக்கில் 2 பேரின் தூக்கு தண்டனையை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தியா மட்டுமின்றி உலகையே உலுக்கிய சம்பவங்களில் ஒன்று நிதாரி கொடூரம். தலைநகர் டெல்லி அருகே உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு உட்பட நொய்டாவை அடுத்த நிதாரி என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் உள்ள சாக்கடையில் ஏராளமான பெண்கள், சிறுமிகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. யார் இந்த கொலைகளை செய்து இருப்பார்கள் என தீவிர விசாரணையில் இறங்கியது காவல் துறை.

எலும்புக் கூடுகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியதில் சிறுமிகள் பெண்கள் என 19 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்புறம் உள்ள சாக்கடையில் தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது. அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை, அது தொழிலதிபர் மொனீந்தர் சிங் பந்தேர் என்பவரது வீடு என்பதை உறுதிபடுத்தியது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் மொனீந்தர் சிங் வீட்டு பணியாளர் சுரேந்திர கோலி குழந்தைகள், இளம் பெண்களை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து சிறுமிகள் மற்றும் பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தொழிலபதிபர் மொனீந்தர் சிங் பந்தேர் மற்றும் சுரேந்திர கோலி ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதில் அவரது வீட்டில் பணிபுரிந்த பெண்ணும் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அது தொடர்பாக வழக்கில் இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து தூக்கு தண்டனை விதித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். இதேபோல் 7 வயது சிறுமியை கோலி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதேபோல் மற்ற பெண்கள் கொலை தொடர்பான வழக்குகளிலும் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இப்படி 12 வழக்குகளில் சுரேந்தர் கோலியும், 2 வழக்குகளில் மோனிந்தர் சிங்கும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டே இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 12 வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பணியாளர் சுரேந்திர கோலி மற்றும் 2 வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தொழிலதிபர் மொனிந்தர் சிங் பந்தேர் ஆகியோரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.












Click it and Unblock the Notifications