ஆளுக்கு ஒரு திசையில் முட்டுக்கட்டை..அம்போவென கைவிடப்பட்ட "இந்தியா" கூட்டணியின் நாளைய ஆலோசனை கூட்டம்!
டெல்லி: டெல்லியில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 18-ந் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி "இந்தியா" கூட்டணியை உருவாக்கின. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இந்த கூட்டணியை உருவாக்கியதில் முதன்மை பங்கு வகித்தனர்.

பாட்னா, பெங்களூர், மும்பை நகரங்களில் அடுத்தடுத்து இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெற்றது. "இந்தியா" என கூட்டணிக்கு பெயர் வைத்து தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை கூட நடத்த தொடங்கினர். ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் ஒட்டு மொத்த கட்சிகளும் "இந்தியா" கூட்டணியை மறந்துவிட்டனர். இது "இந்தியா" கூட்டணி தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திடீரென "இந்தியா" கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்தார். ஆனால் இந்த முறை "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் அப்படி ஒன்றும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதைவிட "இந்தியா" கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை உருவாக்கிவிட்டது. டெல்லி ஆலோசனைக் கூட்டம் குறித்து எனக்கு தகவலே தெரியாது என்றார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. நான் கூட்டத்துக்கே போகலை என்றார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். இதேபோல உபி எதிர்க்கட்சித் தலைவரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவும் நாளைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது.
இந்த 'அபாயகரமான' சூழலில் இந்தியா கூட்டணி கூட்டத்தை நடத்தும் முடிவையே கைவிட்டுவிட்டார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. டெல்லியில் நாளை நடைபெற இருந்த இந்தியா கூட்டணிக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டிசம்பர் 18-ந் தேதி "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications