அதானி ஊழலில் மோடி 'மவுனம்' ஏன்? நாடாளுமன்றத்தில் 3-வது நாளாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!
டெல்லி: அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் 3-வது நாளாகப் போராட்டம் நடத்தினர். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிடோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் அதானி ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் அதானி ஊழல் விவகாரம், மணிப்பூர் வன்முறை, சம்பல் மசூதி விவகாரம், தமிழ்நாடு வெள்ள பாதிப்புக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் போராடி வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. இரு சபைகளிலும் கடும் அமளிக்கு இடையே அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 2 நாட்களாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார்? என்றும் அதானி ஊழல் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இன்று 3-வது நாளாகவும் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதானியும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒன்றுதான்; அதானி விவகாரத்தில் மோடி ஏன் மவுனம் காக்கிறார்? என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications