வாக்கு திருட்டு புகார்! தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணி.. இந்தியா கூட்டணி எம்பிக்கள் முடிவு!
டெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதாகவும் இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தை என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சியின் எம்பிக்கள், நாளை நாடாளுமன்றத்திலிருந்து தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்துகின்றனர்.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) மற்றும் 2024 மக்களவைத் தேர்தலின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் "வாக்கு திருட்டு" புகாரை விசாரிக்க வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாளை பேரணி செல்வார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் போலி படிவங்களை ஒரே அறையில் நிரப்பி வருகின்றனர். ராகுல் காந்தி முன்வைத்த உண்மைகளை யாராலும் மறுக்க முடியாது.
ஒருவரின் பெயர் பல இடங்களில், வாக்குச்சாவடிகளிலும் இடம்பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலின் மின்னணு தரவுகளை ராகுல் காந்தி கோருகிறார், இதை ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி ஒரே EPIC எண்ணில் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை கண்டறியலாம்.
பீகாரில் சிறப்புத் திருத்தம் நடைபெறுவதற்கு என்ன காரணம்? இது 2003ல் முழுமையாகச் சோதிக்கப்பட்டது, இதற்கு பீகாரில் 2 ஆண்டுகள் ஆனது, ஆனால் இந்த முறை அவர்கள் அதை 1 மாதத்தில் செய்ய விரும்புகிறார்கள். அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் போலி படிவங்களை ஒரே அறையில் நிரப்பி வருகின்றனர். இத்தனை பேர் இறந்துவிட்டனர் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது, ஆனால் அவர்களின் பட்டியல் கொடுக்கப்படவில்லை. நாளை பாஜக மற்றும் என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்களைத் தவிர, அனைத்து கட்சிகளைச் சேர்ந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் வரை பேரணியாகச் செல்வார்கள்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications