சீனா முரண்டு பிடித்தால்.. ராணுவ நடவடிக்கைக்கு தயாராக உள்ளோம்.. பிபின் ராவத் அதிரடி பேட்டி
டெல்லி: சீனாவுடனான பேச்சுவார்த்தை பலனளிக்காவிட்டால், ராணுவ நடவடிக்கைகளுக்கான வாய்ப்பு திறந்தே இருக்கிறது என்று இந்திய முப்படைகளின் தலைமை தளபதி (CDS) பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
லடாக் எல்லைப் பகுதியில், கடந்த ஏப்ரல் மாதம் முதலே இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினர் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற மோதலின்போது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

சீனா அட்டூழியம்
ஃபிங்கர் ஏரியா, கல்வான் பள்ளத்தாக்கு, ஹார்ட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோங்குராங் நாலா பகுதிகளில் சீன படையினர் அத்துமீறும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுப்பதற்காக நமது படைகள் அதிக அளவுக்கு இந்த பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

பேச்சுவார்த்தை
பதற்றத்தை குறைக்க, கடந்த மூன்று மாதங்களாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான ஐந்து பேச்சுவார்த்தைகளும் அடங்கும். ஆனால் இதுவரை இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ராணுவ நடவடிக்கை
சீனா அத்துமீறும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில்தான் முப்படைகளின் ராணுவ தளபதி பிபின் ராவத் அளித்துள்ள பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. அவர் கூறுகையில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியான முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றால், சீன ராணுவத்தை எதிர்கொள்வதற்கு நமது ராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்பு திறந்தே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தயார் நிலை
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிபின் ராவத் இந்த தகவலை கூறியுள்ளார். இதனிடையே ராணுவத்தளபதி நரவனே மூத்த தளபதிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தியதாகவும், எல்லைப் பகுதிகளில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications