இஸ்லாமாபாத்தில் மசூதியில் பயங்கரவாத தாக்குதல்! தீவிரவாதிகளுக்கு இந்தியா கண்டனம்!
டெல்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த தற்கொலைத் தாக்குதலை இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் கடுமையாகக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் இரு நாடுகளும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளன.
இஸ்லாமாபாத்தின் ஷேசாத் டவுன் பகுதியில் உள்ள இமாம்பர்கா காதிஜா-துல்-குப்ரா என்ற ஷியா முஸ்லிம் வழிபாட்டுத் தலத்தில் நேற்று தொழுகையின்போது நடந்த இத்தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். 169 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து, "இஸ்லாமாபாத் மசூதியில் இன்று நடந்த குண்டுவெடிப்பு கண்டிக்கத்தக்கது. இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களுக்கு இந்தியா தனது இரங்கலைத் தெரிவிக்கிறது" என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறியது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெரிப்பின் வெளிநாட்டு ஊடகப் பேச்சாளர் மொஷரப் ஜைதி, "இந்தியாவால் திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களின் சமீபத்திய நிகழ்வே இது" என்று குற்றம் சாட்டினார். மேலும், "இந்தியாவின் பயங்கரவாத முகவர்கள் பொருளாதார மீட்சியைத் தடுக்கவோ, பாகிஸ்தானியர்களின் இதயங்களைப் பிளவுபடுத்தவோ அல்லது பாகிஸ்தானின் வளர்ச்சியை குறைக்கவோ மாட்டார்கள்" என்றும் x தளத்தில் பதிவிட்டிருந்தார்.
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தனது பதிவில், பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியவரை எதிர்க்கொண்ட போது, அவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு வழிபாட்டாளர்களின் கடைசி வரிசையில் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொண்டதாகக் குறிப்பிட்டார். இத்தாக்குதலில் இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இக்குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்தது. "இந்தியா இதுபோன்ற எந்தவொரு குற்றச்சாட்டையும் நிராகரிக்கிறது, இது ஆதாரமற்றது மட்டுமல்ல, அர்த்தமற்றதும்" என்று இந்தியா தெரிவித்தது.
மேலும் பேசிய இந்திய வெளியுறவுத்துறை, "பாகிஸ்தான் மற்றவர்களைக் குறை கூறி தன்னையே ஏமாற்றுவது துரதிர்ஷ்டவசமானது" என்று விமர்சித்தது. ஆப்கானிஸ்தானும் இத்தற்கொலைத் தாக்குதலைக் கண்டித்ததுடன், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இதில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்தது.
"ஆப்கானிஸ்தான் அரசு இஸ்லாமிய விழுமியங்களுக்குக் கட்டுப்பட்டது. அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவி மக்களைக் கொல்லவோ, காயப்படுத்தவோ ஒருபோதும் அனுமதிக்காது. அத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவளிப்பதும் இல்லை" என்று ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகம் தனது 'எக்ஸ்' தளத்தில் உறுதிபடத் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications