இந்தியாவில் 30 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. தட்டையாகாத 'கிராப்..' சோதனைகள் அதிகரிப்புதான் ஆறுதல்
டெல்லி: இந்தியாவில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 16 நாட்களுக்கு முன்பு, நோயாளிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டிய நிலையில், கிடுகிடுவென பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கொரோனா கிராப் ஏறுமுகத்தில் இல்லாமல், தட்டையாகுவதுதான் மகிழ்ச்சியளிக்க கூடிய தகவல். ஆனால் இப்போதைக்கு, நமது நாட்டில் கிராப் தட்டையாகும் வழியே தென்படவில்லை என்பது கவலையளிக்கும் தகவலாகும்.
Recommended Video
உலகில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா தற்போது அமெரிக்கா மற்றும் பிரேசிலுடன் பின்தங்கியிருக்கிறது. இந்த நோய் இதுவரை அமெரிக்காவில் 56 மில்லியன் மக்களையும் பிரேசிலில் 35 மில்லியனையும் பாதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை 30,26,806 ஐ எட்டியுள்ளது. இதுவரை 56,648 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். இந்தியாவில் தற்போது 7,08,558 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. 22,61,051 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைவோர் விகிதம் 74.69 சதவீதமாக இருக்கிறது. இறப்பு விகிதம் 1.87 சதவீதம்.
தமிழகத்தில் மேலும் 5980 பேருக்கு கொரோனா.. சென்னையைவிட பிற மாவட்டங்களில் 4 மடங்கு பாதிப்பு அதிகம்
மகாராஷ்டிரா
கொரோனா கேஸ் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில், 14,492 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது அந்த மாநிலத்தின் மிக அதிகபட்ச ஒரு நாள் எண்ணிக்கை. மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 6,71,942.
தமிழகம்
தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரே நாளில், 5980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் தமிழகத்தில் 80 பேர் இறந்துள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 6420 ஆகும். ஒரே நாளில் 5603 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில், 1294 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. கோவையில் 389 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
கேரளா
கேரளாவில் அதிகபட்சமாக, இன்று ஒரே நாளலில் 2172 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 15 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை, 19,538 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 36,539 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
10 லட்சம் பரிசோதனைகள்
கோவிடிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தினசரி சோதனைகளின் எண்ணிக்கை இப்போது 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 10,23,836 சோதனைகள் நடந்தன. ஒரு நாளைக்கு 10 லட்சம் மாதிரிகளை பரிசோதிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்பது முக்கிய தகவலாக பார்க்கப்படுகிறது.
பரிசோதனைகள் அதிகரிப்பு
மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 3 கோடியே 44,91,073 என்ற அளவில் உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்படி, கடந்த ஐந்து நாட்களில் இந்தியா சராசரியாக 8,89,935 சோதனைகளை நடத்தி வருகிறது.