நமது நாட்டில் யாருமே எதிர்பார்க்காத பாதிப்பு.. 93% நிலைமை மோசம்.! கேரளாவில் தான் உயிரிழப்பு அதிகமாம்
டெல்லி: பருவநிலை மாற்றம் என்பது இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பேரழிவாக மாறிவிட்டது. பருவநிலை மாற்றத்தில் இருந்து இப்போது எந்தவொரு நாடும் தப்ப முடிவதில்லை. இதற்கிடையே பருவநிலை மாற்றம் இந்தியாவை எந்தளவுக்கு மோசமாகப் பாதித்து இருக்கிறது என்பது குறித்து ஷாக் தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் அதீத வெப்பம், வெப்ப அலை, குளிர் அலை, சூறாவளி, கனமழை உள்ளிட்ட மோசமான வானிலை என்பது இந்தாண்டு வழக்கமான ஒன்றாக மாறிவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

உயிரிழப்புகள்: கடந்த 9 மாதங்களில் மட்டும் இதுபோன்ற மோசமான வானிலையால் நாம் 3,238 பேரை இழந்துள்ளோம். மேலும், 3.2 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. 2.35 லட்சம் வீடுகள் அழுந்துள்ள நிலையில், சுமார் 9,457 கால்நடைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்ட்ரல் ஃபார் சயின்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் காலநிலை 2024: தீவிர வானிலை நிகழ்வுகளின் மதிப்பீடு தலைப்பில் இந்திய வானிலை மையத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த டேட்டா உருவாக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள பல தகவல்கள் நமக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது.
நிலைமை மோசம்: கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், அதாவது 273 நாட்களில், 235 நாட்களில் தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் 2,923 பேர் மற்றும் 92,519 விலங்குகள் இறந்துள்ளன. மேலும் 1.84 ஹெக்டர் அளவிலான பயிர்களைப் பாதிக்கப்பட்டுள்ளன. 80,293 வீடுகளைச் சேதமாகியுள்ளன. ஆனால், இந்தாண்டு பாதிப்புகள் அதை விட மோசமாக இருக்கிறது. இந்தாண்டு சுமார் 255 நாட்கள், அதாவது 93% நாட்கள் நிலைமை மோசமாகவே இருந்துள்ளது.
கடந்த 1901ம் ஆண்டு முதல் உள்ள டேட்டாவை எடுத்து பார்த்தால் இந்தாண்டு பாதிப்புகள் மிக மோசமாக இருக்கிறது. கடந்த 123 ஆண்டுகளில் இந்த செப். மாதம் தான் வறண்ட மாதமாகும். மேலும், 123 ஆண்டுகளிலேயே இந்தாண்டு பிப். மாதம் தான் வெப்பம் அதிகமாக இருந்துள்ளது. பிப். மாதம் மட்டுமின்றி, ஜூலை, ஆகஸ்ட், செப். மாதங்களிலும் வெப்பம் அதிகமாகவே இருந்துள்ளது.
வெப்பம், வறட்சி: இதுபோல வெப்பம், வறட்சி ஒரு பக்கம் என்றால் அசாமில் மழை கேப் விடாமல் கொட்டி தீர்த்துள்ளது. இந்தாண்டு மட்டும் அங்கு சுமார் 122 நாட்கள் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு இருந்துள்ளது. இதனால் அசாம் மாநிலத்தின் பெரும் பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தேசியளவில் பார்க்கும் போது வெள்ளத்தால் நாம் 1376 உயிர்களை இழந்துள்ளோம்.
பிராந்தியம் வாரியாக பார்க்கும் போது மத்திய இந்தியப் பகுதியில் தான் மோசமான வானிலை அதிகம் இருந்துள்ளது. அங்கு 218 நாட்கள் மோசமான வானிலை நிலவியுள்ளது. தொடர்ந்து வடமேற்கு இந்தியாவில் 213 நாட்கள் மோசமான வானிலை நிலவியுள்ளது. மாநில வாரியாக பார்க்கும் போது மத்தியப் பிரதேசத்தில் தான் நிலைமை மோசம். கடந்த 9 மாதங்களில் சுமார் 176 நாட்கள், அதாவது சுமார் 5.5 மாதங்கள் அங்கு மோசமான வானிலை பதிவாகியுள்ளது.
கேரளாவில் நிலைமை மோசம்: உயிரிழப்புகளும் மத்திய இந்தியாவில் தான் அதிகம். அங்கு 1001 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தெற்கு இந்தியாவில் 762 பேரும், கிழக்கு இந்தியா பகுதியில் 741 பேரும் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு இந்தியாவில் 724 பேர் பலியாகியுள்ளனர். மாநிலம் வாரியாக பார்க்கும் போது கேரளாவில் தான் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. கேரளாவில் 550 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 353 பேர் உயிரிழந்துள்ளனர்.
பருவநிலை மாற்றம் மிக மோசமாக மாறி வரும் நிலையில், உடனடியாக உலக நாடுகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications